கோவையில் முதல் முறையாக சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு... எந்த வாகனங்களுக்கு செட் ஆகும் தெரியுமா?
கோவையில் பொது சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை எம்ஜி மோட்டார் நிறுவனம் திறந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் மற்றும் டாடா பவர் ஆகிய 2 நிறுவனங்களும், கோவையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பொது 60 kW சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளன. கோவையில் இப்படியான ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இன்றுதான் (டிசம்பர் 30) இந்த சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் டீலர்ஷிப்பில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50 kW மற்றும் 60 kW டிசி சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காக டாடா பவர் நிறுவனத்துடன் எம்ஜி மோட்டார் நிறுவனம் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகதான் கோவையில் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. சிசிஎஸ் (CCS) ஃபாஸ்ட் சார்ஜிங் தரநிலைக்கு இணக்கமான அனைத்து வாகனங்களும் இந்த பொது சார்ஜிங் ஸ்டேஷனை பயன்படுத்தி கொள்ள முடியும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில், இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் நடப்பாண்டு தொடக்கத்தில்தான் இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத சூழலிலேயே எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை துணிச்சலாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அத்துடன் நின்று விடாமல், நாடு முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை ஏற்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரிலும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை எம்ஜி மோட்டார் நிறுவனம் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் போட்டியிட்டு வருகிறது.

இதுதவிர டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கும், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி சவாலாக திகழ்கிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் எஸ்யூவியாக இருப்பதே இதற்கு காரணம்.

இந்திய சந்தையில் தற்போது விரல் விட்டு எண்ண கூடிய வகையில் ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே கிடைத்து வரும் நிலையில், வரும் காலங்களில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








