நல்ல காலம் பொறந்தாச்சு... கார் நிறுவனங்களின் முகத்தில் சந்தோஷ ரேகை... இனி சேல்ஸ் எகிற போகுது...
கார் விற்பனை மீண்டும் உயர்வதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதால், கார் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினத்தில் இருந்து நாடே முடங்கியது. கார் உற்பத்தி நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஊரடங்கு காரணமாக கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

அத்துடன் டீலர்ஷிப்கள் மூடப்பட்டதால், கார்களின் விற்பனையும் முடங்கியது. மார்ச் இறுதியில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் மாதத்தில் மிக தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஒரு வழியாக கடந்த மே முதல் வாரத்தில் இருந்து, நீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது.

இருந்தாலும் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் காரணமாக கார்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக முன்னேற்றம் அடையவில்லை. ஆனால் இந்த நிலைமை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கார் விற்பனையில் ஓரளவிற்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

இதில், எம்ஜி மோட்டார் நிறுவனமும் ஒன்று. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் 41 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த விற்பனை வளர்ச்சியில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால், உற்பத்தி நிறுவனங்கள் புது தெம்பை பெற்றுள்ளன.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 2,851 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 41 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெறும் 2,018 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் உள்ளிட்ட எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஹெக்டர் ப்ளஸ் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 6 சீட்டர் எஸ்யூவி மாடல் ஆகும். இந்த காருக்கு ஃபேம்லி செக்மெண்ட்டில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் மின்சார வாகன செக்மெண்ட்டில், எம்ஜி இஸட்எஸ் எஸ்யூவி காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது மின்சார வாகனங்களுக்கு தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சிறப்பு சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளன. எனவே வரும் மாதங்களில் மின்சார கார்களின் விற்பனை உத்வேகம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதன் காரணமாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனையும் உயரலாம். எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அடுத்து க்ளோஸ்டர் பிரீமியம் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக வரும் எம்ஜி க்ளோஸ்டர், தீபாவளியையொட்டி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இது விலை உயர்ந்த பிரீமியம் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்றாலும், எம்ஜி நிறுவனத்திற்கு ஓரளவிற்கு விற்பனை எண்ணிக்கையை பெற்று தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே இந்தியாவில் தற்போது கார் விற்பனை அதிகரிக்க தொடங்கியிருப்பது, உற்பத்தி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு கார்களில் பயணம் செய்வதையே பாதுகாப்பாக கருதி வருகின்றனர். இதன் காரணமாக கார் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகை காலமும் நெருங்கி வருகிறது. இந்த 2 காரணங்களாலும் கார் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








