ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி மோட்டார்!
கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடல்களை குறிவைத்து புதிய கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் வகையில், மிகச் சிறப்பான செயல்திட்டங்களுடன் பணியாற்றி வருகிறது. ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்த அடையாளத்தை வைத்துக் கொண்டு அடுத்து எலெக்ட்ரிக் எஸ்யூவி, பிரிமீயம் எஸ்யூவி என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், க்ளோஸ்ட்டர் எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், அதற்கு அடுத்தும் ஒரு எஸ்யூவி ரக மாடலையே இந்தியாவில் கொண்டு வர எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகளுக்கு இணையான ரகத்தில் புதிய மாடலை கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக எக்ஸ்பிரஸ் டிரைவ்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள எம்ஜி மோட்டார் இந்தியப் பிரிவு தலைவர் ராஜீவ் சாபா,"எம்ஜி பிராண்டின் மதிப்பை உயர்த்தும் வகையிலான மாடல்களை களமிறக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதைத்தொடர்ந்து, அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டிலான புதிய கார் மாடல்கள் மீது கவனம் செலுத்த இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்ததாக எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் எஸ்யூவி மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கருதப்படுகிறது. அதாவது, கியா செல்டோஸ் கார் மார்க்கெட்டை குறிவைத்து இந்த க்ராஸ்ஓவர் ரக மாடலை எம்ஜி மோட்டார் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்புத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எஸ்யூவியானது 5 சீட்டர் மாடலாக இருக்கும். இந்த எஸ்யூவியிலும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளை எதிர்பார்க்கலாம். அண்மையில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட அதே ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான் இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு புதிய இசட்எஸ் பெட்ரோல் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த எம்ஜி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே, புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் எம்ஜி மோட்டார் செயல்பட்டு வருவதால், மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கிடைத்த பின்னரே புதிய முதலீடு செய்ய இயலும்.


Click it and Unblock the Notifications








