முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் கொடுத்த எம்ஜி எம்பிவி கார்
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்பிவி கார் முதல்முறையாக இந்திய மண்ணில் தென்பட்டுள்ளது. அந்த காரின் படங்களையும், கூடுதல் விபரங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிக தீவிரமான வர்த்தக நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு கை மேல் பலனாக, எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த உற்சாகத்துடன் இந்தியாவில் பல புதிய மாடல்களை வரிசைகட்ட எம்ஜி திட்டமிட்டுள்ளது. அதாவது, அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் 14 புதிய கார் மாடல்களை காட்சிப்படுத்த உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதில், ஒரு எம்பிவி காரும் உண்டு என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்பிவி ரக கார் இந்திய மண்ணில் முதல்முறையாக தென்பட்டுள்ளது. மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு இது போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

சீனாவில் இந்த எம்பிவி கார் செயிக் குழுமம் தனது மேக்சஸ் பிராண்டில் மேக்சஸ் ஜி10 என்ற பெயரில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதே மாடல் இந்தியாவில் எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

சீனாவில் மேக்சஸ் ஜி10 எம்பிவி கார் 7, 9 மற்றும் 10 சீட்டர் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 7 சீட்டர் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தென்பட்டிருக்கும் மேக்சஸ் ஜி10 எம்பிவி கார் மாடலானது எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது. ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காருக்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைக்க இருக்கும் வரவேற்பை பொறுத்து விற்பனைக்கு கொண்டு வரும் முடிவை எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான செயிக் குழுமம் எடுக்கும்.

எனினும், எம்பிவி ரக கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் வர இருப்பது போலவே, இந்த எம்பிவி காரிலும் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடலை முதலில் களமிறக்க எம்ஜி திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து 9 சீட்டர் மற்றும் 10 சீட்டர் மாடல் குறித்து அதிக விசாரணை இருந்தால், அந்த மாடல்களையும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த புதிய எம்பிவி காரிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. இதனால், போதிய திறன் வாய்ந்த எஞ்சினை இந்த கார் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த புதிய எம்பிவி கார் மட்டுமின்றி, மேக்சஸ் டி90 பிரிமீயம் எஸ்யூவி காரையும் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் அறிமுகப்படுத்த செயிக் குழுமம் திட்டமிட்டுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.
Source: Carandbike


Click it and Unblock the Notifications








