கொரோனா அச்சம்... புதிய ஹோண்டா சிட்டி காரின் மீடியா டிரைவ் நிகழ்ச்சி ரத்து!
கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் மீடியா டிரைவ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கான மீடியா டிரைவ் நிகழ்ச்சி கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வரும் 18ந் தேதி ஹோண்டா சிட்டி கார் பத்திரிக்கையாளர் முன்னிலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கும், 19ந் தேதி மீடியா டிரைவ் நிகழ்ச்சியும் நடக்க இருந்தது. இதனால், பத்திரிக்கையாளர்களும், இந்த காரை வாங்க திட்டமிட்டிருப்போரும் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, முன்னெச்சரிக்கையாக ஹோண்டா சிட்டி மீடியா டிரைவ் நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நகரங்களுக்கு ஹோண்டா சிட்டி காரை அனுப்பி, ஆங்காங்கே பத்திரிக்கையாளர்கள் ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பை ஹோண்டா கார் நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 5ம் தலைமுறை மாடலாக ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. அதாவது, புதிய ஹோண்டா சிவிக் மற்றும் அக்கார்டு கார்களின் டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், பிஎஸ்-6 தரமுடைய பெட்ரோல் எஞ்சின் தேர்வில் புதிய ஹோண்டா சிட்டி கார் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 119 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மேலும், வசதிகளை பொறுத்து வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. பிஎஸ்-6 டீசல் மாடல் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

புதிய ஹோண்டா சிட்டி கார் 4,549 மிமீ நீளமும், 1,748 மிமீ அகலமும், 1,489 மிமீ உயரமும் பெற்றிருக்கும். இந்த கார் 2,600 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கும். இதனால், உட்புறத்தில் இடவசதி வெகுவாக மேம்பட்டு இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் க்ரூஸ் கன்ட்ரோல், சன்ரூஃப் ஆகியவையும் இடம்பெர்றிருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரில் 4 ஏர்பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








