சொகுசு கார்களுக்கு போட்டியாக ராஜ இருக்கைகளுடன் வரும் புதிய தலைமுறை கியா கார்னிவல் 4 சீட்டர்!
சொகுசு கார்களுக்கே பெரும் போட்டியாக மாற இருக்கிறது கியா கார்னிவல் கார். புதிய தலைமுறை மாடலாக உருவாகி வரும் கியா கார்னிவல் காரின் 4 சீட்டர் மாடல் ராஜ இருக்கைகளுடன் தயாராகி வருவது தெரிய வந்துள்ளது. இந்த மாடல் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

உலகின் மிகச் சிறந்த சொகுசு கார் மாடலாக எஸ் க்ளாஸ் கார் கருதப்படுகிறது. இந்த காரின் பின் இருக்கைகள் பெரும் கோடீஸ்வர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது. இந்த காருக்கே போட்டியை தரும் வகையில், புதிய கியா கார்னிவல் கார் உருவாகி வருவது தெரிய வந்துள்ளது.

ஆம். அண்மையில்தான் இந்தியாவில் கியா கார்னிவல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அளவில் மிகப்பெரிய இந்த எம்பிவி கார் 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 9 சீட்டர் மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் சொகுசு கார் வாடிக்கையாளர்களையும் சுண்டி இழுத்துள்ளது,

இதற்கு முக்கிய காரணமாக, அதிக இடவசதி, சொகுசான பயணத்தை தருவதுடன், மிக சரியான விலையில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதுதான். இந்த நிலையில், புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் இன்னமும் ஒருபடி மேலே போய் சொகுசு கார் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் அம்சத்துடன் வர இருக்கிறது.

புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு வரும் கார்னிவல் கார் இந்த ஆண்டு இறுதியில், கியா நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த புதிய மாடலில் 4 சீட்டர் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. அதாவது, முன்புறத்தில் ஓட்டுனருக்கும், முன் வரிசை பயணிக்கும் சொகுசான இருக்கைகள் வழங்கப்படும். இது பொதுவானதாகவே இருக்கும்.

ஆனால், பின்புறத்தில் மூன்று வரிசை இருக்கைகளை அமைக்கப்பட வேண்டிய விசாலமான இடத்தில் வெறும் இரண்டு ராஜ இருக்கைகளை கொடுக்க கியா மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த கார் சொகுசு கார்களுக்கே மிகப்பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியும் விலை ரூ.45 லட்சத்தில் இருந்தாலும், இவ்வளவு இடவசதி, ஹெட்ரூம், விசாலமான உணர்வை தரும் வகையில் பல கோடி மதிப்புடைய சொகுசு கார்களே இருக்காது என்ற அளவில் இந்த காரை உருவாக்கி வருகிறது கியா மோட்டார் நிறுவனம்.

பெரும்பாலும் வெளியில் உள்ள கஸ்டமைஸ் நிறுவனங்களின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் இருக்கைகளை இதுபோன்ற கேப்டன் இருக்கைகள் அல்லது ராஜ இருக்கைகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கிக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து, காத்திருக்கவும் வேண்டி இருக்கும்.

ஆனால், கியா மோட்டார் நிறுவனம இதுபோன்ற மிக சொகுசான இருக்கையுடன் கூடிய கார்னிவல் காரை ஆலையிலேயே முழுமையாக கட்டமைத்து விற்பனைக்கு கொண்டு வரும் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜ இருக்கைகள் தவிர்த்து, உட்புறத்தில் பல்வேறு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. இதனால், புதிய கியா கார்னிவல் கார் வேற லெவல் எம்பிவி கார் மாடலாக மாற இருக்கிறது.

அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை கார்களில் கொடுக்கப்படுவது போன்ற டேஷ்போர்டில் மிகப்பெரிய இரண்டு திரைகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் புதிய கியா கார்னிவல் கார் 2022ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமீயம் எம்பிவி மற்றும் செடான் கார் பக்கம் செல்வோரை இந்த கார் தடுத்து நிறுத்தி தன் பக்கம் கவனத்தை ஈர்க்கும் என்று நம்பலாம்.
Image Courtesy: Noble Klasse


Click it and Unblock the Notifications








