புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் எப்போது?
புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் விரைவில் வரும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய மாடலில் இருந்து அனைத்து விதங்களிலும் முற்றிலும் புதிய மாடலாகவும், அதேநேரத்தில் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் வருவதால் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இந்த புதிய மாடலின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலுக்கு தற்போது சில மஹிந்திரா டீலர்களில் முன்பதிவு ரகசியமாக ஏற்கப்படுதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கும்போது, தற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.

தற்போதைய மாடலை விட புதிய தலைமுறை தார் எஸ்யூவி பெரிய கார் மாடலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா டியூவி300 மற்றும் ஸ்கார்ப்பியோ ஆகிய எஸ்யூவிகள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் தோற்றமும் அதிக கம்பீரமாக இருப்பதுடன், உட்புற இடவசதியும் வெகுவாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

முகப்பில் மஹிந்திரா நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட்டுகள், மறுவடிவமைப்பு பெற்ற பம்பர்களுடன் வசீகரமாக மாறி இருக்கிறது. இந்த புதிய மாடலானது ஆலையிலேயே ஹார்ட் டாப் கூரை கட்டமைப்புடன் வர இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் உட்புறத்திலும் டேஷ்போர்டு உள்ளிட்டவை முற்றிலும் புதிதாக மாறி இருக்கிறது. புதிய மாடலில் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புதிய ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோஸ், முன்னோக்கிய பின் இருக்கைகள் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். லோ ரேஷியோ கியர்பாக்ஸுடன் கூடிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கட்டமைப்புடன் வர இருக்கிறது. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், டியூவல் ஏர்பேக்குகள், ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட வசதிகளுடன் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








