2020 மஹிந்திரா தார் மாடலுக்கான முன்பதிவுகள் ரகசியமாக துவக்கமா..? வெளியான புதிய தகவல்
இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிட்டதாகவும், இந்த 2020 மாடல் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சாலையில் பலமுறை சோதனை ஓட்டங்களின் போது கண்டறியப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தாரின் ஸ்பை படங்கள் இந்த புதிய தலைமுறை எஸ்யூவி காரில் கொண்டுவரப்பட்டுள்ள வெளிப்புற மற்றும் உட்புற அப்டேட்களை வெளிகாட்டி இருந்தன.

இந்த நிலையில் தற்போது டீம்பிஎச்பி செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த 2020 மாடலுக்கான முன்பதிவுகள் டீலர்ஷிப்களில் ரகசியமாக அதிகாரப்பூர்வமின்றி நடைபெற்ற வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் வரும் சில மாதங்களில் அறிமுகமாகுமேயானால், அது நாம் எதிர்பார்க்காத ஒன்றாகவே இருக்கும்.

ஏனெனில் கொரோனா வைரஸினால் கடந்த இரு மாதங்களாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கினால் இதன் அறிமுகம் கூடுதலாக சில மாதங்களுக்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புதிய தலைமுறை தார் மாடலின் சிறப்பம்சமே முந்தைய தலைமுறையை காட்டிலும் சற்று பெரிய அளவிலான இதன் தோற்றமே ஆகும்.

ஏனெனில் 2020 தார் மாடல் டியூவி300 மற்றும் ஸ்கார்பியோ மாடலின் புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் கட்டமைப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போதைய தார் மாடலை காட்டிலும் விசாலமான உட்புற கேபினில் புதிய தார் மாடலை எதிர்பார்க்கலாம்.

அதேநேரம் வெளிப்புறத்திலும் 2020 தார், புதிய டிசைனில் முன் பக்கத்துடன் பெரிய செங்குத்தான ஸ்லாட்களுடன் க்ரில், புதிய ஹெட்லேம்ப்கள், திருத்தியமைக்கப்பட்ட பமபர்களை முன் மற்றும் பின்புறத்தில் கொண்டுள்ளது. இவை தவிர்த்து தொழிற்சாலையில் பொருத்தப்படும் ஹார்ட்-டாப் மேற்கூரையையும் கூடுதல் தேர்வாக பெற்றுள்ளது.

உட்புறத்தில் மிக முக்கியமான அப்டேட்டாக ஃப்லோட்டிங் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலை புதியதாக இரு என்ஜின் தேர்வுகளுடன் மஹிந்திரா நிறுவனம் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் இந்த 2020 மாடலில் எதிர்பார்க்கப்படும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனையும், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 140 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டவை.

இந்த என்ஜின்களுடன் குறைந்த-விகித கியர்பாக்ஸ் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிலையாக இணைக்கப்படவுள்ளது. இதனுடன் கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திரா தார், பொதுவாகவே ஆற்றல் மிக்க மாடலாக சந்தையில் பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது முன்பை விடவும் கூடுதல் வசதிகளுடன் வெளிவரும் புதிய தலைமுறை தார் மாடலுக்கு 2020 ஃபோர்ஸ் குர்கா மற்றும் மாருதி சுசுகி ஜிம்னி போன்ற எதிர்கால இந்திய சந்தைக்கான மாடல்கள் போட்டியாக விளங்கவுள்ளன.


Click it and Unblock the Notifications








