உச்சாணி கொம்பில் மஹிந்திரா தார்... உச்சுக் கொட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்!
அசத்தும் அம்சங்களுடன் வந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், இந்த காருக்கான காத்திருப்பு காலம் பல மாதங்கள் நீள்வது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஆஃப்ரோடு பயன்பாட்டு வாகன சந்தையில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. இந்த நிலையில், காலத்திற்கு தக்க வசதிகள், தொழில்நுட்ப அம்சங்கள், டிசைனுடன் புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா தார் மேம்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த புதிய மாடல் கடந்த மாதம் 2ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காகவே காத்திருந்த ஆஃப்ரோடு பிரியர்களும், பிரபலங்களும் போட்டி போட்டு இந்த எஸ்யூவியை புக்கிங் செய்தனர்.

இதனால், இந்த எஸ்யூவிக்கு டிமான்ட் அதிகரித்தது. ஆனால், மஹிந்திரா நிறுவனமே இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதாவது, உற்பத்தி இலக்கை குறைவாக நிர்ணயித்தததால், சிக்கல் எழுந்துள்ளது.

புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு 20,000க்கும் மேற்பட்ட புக்கிங் குவிந்ததால், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத நிலையில், தவித்து வருகிறது மஹிந்திரா. இதனிடையே, கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ, புதிய தார் எஸ்யூவிக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது புதிய தார் கனவில் மிதந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு குண்டை தூக்கிப் போட்டுள்ளது. இன்னும் 7 முதல் 8 மாதங்கள் வரை புதிய தார் எஸ்யூவியை டெலிவிரிப் பெறும் நிலை உள்ளதால், வாடிக்கையாளர் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மஹிந்திரா தார் எஸ்யூவியை விரைவாக டெலிவிரி கொடுக்கும் வகையில், உற்பத்தியை அதிகரிக்க இரவு பகலாக வேலை செய்து வருவதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். எனவே, வரும் மாதங்களில் புதிய தார் எஸ்யூவியின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, காத்திருப்பு காலம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் டிசைன் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. பழைய மாடலைவிட உருவத்தில் பெரிய மாடலாக மாறி இருப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்துள்ளது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன.

இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலானது 130 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அனைத்து வேரியணட்டுகளிலும் ஷிஃப் ஆன் ஃப்ளை என்ற இயங்கும்போதே 4 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு மாற்றும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்கல் லாக்கிங் டிபரன்ஷியல் தொழில்நுட்பமும் உள்ளது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், ரோல் ஓவர் மிட்டிகேஷன் கன்ட்ரோல் தொழில்நுட்பம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்று புதிய தார் எஸ்யூவி அசத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








