எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து நான்கு சக்கர மின்சார வாகனத்தை தயாரிக்க ஓலா திட்டம்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஓலா டாக்சி நிறுவனம் அடுத்து நான்கு சக்கர மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

பெருநகரங்களில் வாடகை கார், ஆட்டோ போக்குவரத்து சேவையில் முன்னணி வகிக்கும் ஓலா நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது.
அடுத்த ஆண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கு ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எடெர்கோ என்ற மின்சார வாகன நிறுவனத்துடன் இணைந்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க உள்ளது.
மேலும், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள எடெர்கோ ஆலையில் உற்பத்தி செய்து இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் வர்த்தக கூட்டம் ஒன்றில் பேசிய ஓலா நிறுவனத்தின் உயர் அதிகாரி பவிஷ் அகர்வால்,"மின்சார வாகனப் போக்குவத்து துறையில் முன்னிலை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்காக, சிறிய வகை மின்சார வாகனங்களை உருவாக்கும் திட்டமும் உள்ளது.
சிறிய வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சிறிய வகை நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரிக்கும் திட்டமும் உள்ளது. இதர மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்குவதற்கு திட்டம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
இதனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து குவாட்ரிசைக்கிள் ரக மின்சார வாகனத்தை ஓலா நிறுவனம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த வாகனங்களை நிலைநிறுத்தவும் ஓலா திட்டமிட்டுள்ளது.
ஓலா டாக்சி நிறுவனத்தை தொடர்ந்து ஓலா எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனமும் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத் திட்டத்துடன் இலக்குகளை வகுத்துள்ளதும் உறுதியாகி இருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்திக்காக மிகப்பெரிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்கவும் ஓலா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








