எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஐரோப்பா... இந்தியா பாத்து கத்துக்கணும்...
எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் ஐரோப்பா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐரோப்பாவில் நடப்பாண்டு மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முழு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் அரை மில்லியன் (5 லட்சம்) எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஐரோப்பா கடந்த நவம்பர் மாதம் கடந்தது. இதில், முழு எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

ப்ளக்-இன் ஹைப்ரிட் கார்களையும் சேர்த்தால், ஐரோப்பாவில் நடப்பாண்டு 1 மில்லியனுக்கும் அதிகமான (10 லட்சம்) மின்சாரம் சார்ந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. ஐரோப்பாவில் விற்பனையாகும் 10 கார்களில் கிட்டத்தட்ட ஒன்று மின்சாரம் சார்ந்த காராக உள்ளது என தற்போது வெளியாகியுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

100 சதவீதம் முழு எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை, விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு இறுதிக்குள் 6 லட்சம் என்ற மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் அதிக முழு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையான நாடு என்ற பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. அங்கு 98,610 முழு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்தபடியாக பிரான்ஸில் 70,587 முழு எலெக்ட்ரிக் கார்களும், இங்கிலாந்தில் 66,611 முழு எலெக்ட்ரிக் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட வேண்டியிருப்பதாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.

இதில், ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆசிய கண்டத்தை பொறுத்தவரை சீனா போன்ற ஒரு சில நாடுகளில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு இன்னும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் மிக குறைவான எண்ணிக்கையில்தான் எலெக்ட்ரிக் கார்கள் கிடைக்கின்றன.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைத்து வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் என பார்த்தால், ஹூண்டாய் கோனா, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி என ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றன.

எனினும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. எனவே வரும் காலங்களில் இந்திய சந்தையிலும் ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. குறிப்பாக டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் போன்ற கார்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தற்போது மானியம் வழங்கி வருகின்றன. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் குறித்து மக்களுக்கு இருக்கும் அச்சத்தை போக்குவதற்காக சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








