பினின்ஃபரீனா கைவண்ணத்தில் இந்தியாவுக்கான புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்கள்!
இந்தியாவுக்காக ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எஸ்யூவி மாடல்களை இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மஹிந்திராவுடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த நிலையில், ஃபோர்டு மற்றும் பிராண்டில் பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மாடல்கள் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் இரு பிராண்டுகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்தியாவுக்கான புதிய ஃபோர்டு கார்கள் மஹிந்திரா கூட்டணியிலும், தொழில்நுட்ப ஒத்துழைப்பிலும் உருவாக்கப்பட உள்ளன.

அந்த வகையில், ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடல்களை மஹிந்திரா கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் வடிவமைக்க உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது. எனினும், ஃபோர்டு நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில்தான் புதிய எஸ்யூவி மாடலை டிசைன் செய்து தரும் பொறுப்பு பினின்ஃபரீனா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் வர இருக்கும் முதல் எஸ்யூவி மிட்சைஸ் ரகத்திலானது எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 அடிப்படையிலானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடலானது W601 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இதே மாடல் ஃபோர்டு பிராண்டில் CX757 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மஹிந்திரா மற்றும் ஃபோர்டு பிராண்டில் வர இருக்கும் புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலானது டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். இந்த மாடல்தான் பினின்ஃபரீனா கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலில் 180 எச்பி பவரை வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 190 எச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இதே பெட்ரோல் எஞ்சின்தான் விரைவில் அறிமுகமாகும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதுதவிர்த்து, கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு இணையான ரகத்தில் அடுத்த எஸ்யூவி மாடலையும் ஃபோர்டு நிறுவனம் பினின்ஃபரீனாவிடம் கொடுத்து வடிவமைக்க உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இந்த எஸ்யூவியானது மஹிந்திரா எக்ஸ்யூவி400 அடிப்படையிலான மாடலாக இருக்கும்.

இந்த மாடலில் மஹிந்திராவின் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் வரிசையில் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி பவரை வழங்கும். டீசல் எஞ்சின் 123 எச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். புதிய தலைமுறை ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியையும் பினின்ஃபரீனா நிறுவனம்தான் வடிவமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








