இந்த முன்னணி நிறுவனத்தின் கார்கள் விலை இவ்வளவு உயரப்போகுதா? எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...
இந்தியாவில் ரெனால்ட் நிறுவன கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக இன்று (டிசம்பர் 18ம் தேதி) அறிவித்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்து கார்களின் விலையும் 28 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடும். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் தற்போதைய நிலையில் க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்டர் ஆகிய கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

இதில், க்விட் மற்றும் ட்ரைபர் ஆகிய இரண்டு கார்களும்தான் ரெனால்ட் நிறுவனத்திற்கு ஓரளவு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மாதந்தோறும் ஈட்டி தந்து கொண்டுள்ளன. ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை சமீப காலமாக குறைவாக உள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் புதிய தயாரிப்புகளை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதில், ரெனால்ட் கிகர்தான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இந்திய சந்தையில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

கடந்த ஒரு சில மாத கால அளவில் மட்டும் கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் நிஸான் மேக்னைட் என மூன்று புதிய கார்கள் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனமும் கிகர் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒட்டி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை 6 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ரெனால்ட் நிறுவனம் மட்டுமின்றி இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, ஃபோர்டு இந்தியா, மஹிந்திரா, எம்ஜி மோட்டார், கியா உள்ளிட்ட நிறுவனங்களும், உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக வரும் ஜனவரி மாதம் முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஜனவரி முதல் விலை உயர்வை அறிவித்துள்ளது. கொரோனா பிரச்னையால் ஏற்பட்ட சரிவில் இருந்து, பண்டிகை காலம் காரணமாக தற்போதுதான் வாகன நிறுவனங்கள் மீண்டுள்ளன. அதற்குள்ளாக அமலுக்கு வரவுள்ள இந்த விலை உயர்வு காரணமாக வாகன விற்பனை சரியுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








