புதிய ஸ்கோடா ரேபிட், சூப்பர்ப் கார்களுக்கு மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மற்றும் சூப்பர்ப் கார்களுக்கு மாதச் சந்தா அடிப்படையிலான நீண்ட கால குத்தகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனாவுக்கு பிறகான சூழல் கார் மார்க்கெட்டை வெகுவாக மாற்றிப்போட்டுவிட்டது. புதிய கார்களை வாங்கும் நடைமுறை எளிதாக்கும் விதத்தில், பல்வேறு சிறப்பு கடன் திட்டங்கள் மாதச் சந்தா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்கோடா நிறுவனம் தனது பிரபலமான ரேபிட், சூப்பர்ப் கார் மாடல்களுக்கு சிறப்பு மாதச் சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய மாதச் சந்தா திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மாதச் சம்பளதாரர்கள், பொதுத் துறை பணியாளர்கள், தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு இந்த திட்டங்கள் பொருத்தமானதாக இருக்கும்.

ஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ மற்றும் சூப்பர்ப் கார் மாடல்களுக்கு 24, 36, 48 மற்றும் 60 மாதங்கள் கொண்ட மாதச் சந்தா திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாதச் சந்தா திட்டம் ரூ.22,580 என்ற கட்டணத்தில் இருந்து ஆரம்பமாகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ரேபிட், சூப்பர்ப் கார்களுக்கு சாலை வரி, பிரேக்டவுன் உதவி, விபத்துக்களால் ஏற்படும் சேதங்களை சரிசெய்து தருதல், பராமரிப்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்தும் மாதச் சந்தாவில் அடங்கும். தனியாக எதுவும் செலவு செய்ய வேண்டியதில்லை. டயர், பேட்டரியை மாற்றிக் கொள்வது, இல்லையெனில், காரையே மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், புனே, டெல்லி ஆகிய நகரங்களில் இந்த மாதச் சந்தா திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் கூறுகையில்,"உலக அளவில் ஆட்டோமொபைல் துறை மிக வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதற்கு தக்கவாறு மாறிக் கொள்வது அவசியம். இதற்காக, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தீர்வு கொடுக்கும் வகையில், இந்த மாதச் சந்தா திட்டத்தை அறிமுகம்செய்துள்ளோம். இந்த மாதச் சந்தா திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும்," என்று தெரிவித்துள்ளார்.

ஓரிக்ஸ் ஆட்டோ நிறுவனத்தினஅ நிர்வாக இயக்குனர் சந்தீப் கம்பீர் கூறுகையில்,"ஸ்கோடா நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு புதுமையான விதத்தில் வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். சொந்தமாக வைத்து ஓட்டும் அனுபவத்தை இந்த திட்டங்கள் வழங்கும். வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், எங்களது திட்டங்களை மேம்படுத்தி வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








