பொங்கலுக்கு புது ஸ்கோடா கார் வாங்கப் போறீங்களா? முதல்ல இதப் படிங்க!
வரும் ஜனவரி 1 முதல் புதிய கார்களின் விலை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் மாடலுக்கு தக்கவாறு விலையை உயர்த்துவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் கார் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வர்த்தகத்தில் புதிய யுக்திகளுடன் செயலாற்றி வருகிறது. மேலும், புதிய எஸ்யூவி மாடல்களை கொண்டு வருவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த நிறுவனத்தின் ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலுக்கும், கரோக் எஸ்யூவிக்கும் இந்தியர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், உற்சாகமடைந்துள்ள ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பல புதிய மாடல்களை கொண்டு வருவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு, பண பரிமாற்று விகிதத்தில் உள்ள ஏற்ற இறக்கத்தை மனதில் வைத்து கார்களின் விலையை உயர்த்துவது குறித்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

தனது கார் விற்பனையில் பாதிப்பு வராத வகையில் இந்த விலை உயர்வை நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 1 முதல் புதிய கார்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கார் மாடலுக்கு தக்கவாறு இந்த விலை உயர்வு இருக்கும்.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ரேபிட், ஆக்டேவியா ஆர்எஸ்245, சூப்பர்ப் மற்றும் கரோக் எஸ்யூவி வகை மாடல்களை இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளது.

இதனிடையே, வருஷ கடைசியில் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி சலுகைகளையும் ஸ்கோடா ஆட்டோ வழங்குகிறது. ஸ்கோடா ரேபிட் காருக்கு ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.50,000 வரை அப்கிரேட் ஆஃபர் என்ற சேமிப்புச் சலுகையையும், 6 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டத்தையும் வழங்குகிறது.

டீலர்களுக்கு டீலர் ஆஃபரில் வேறுபாடு இருக்கலாம். எனவே, ஸ்கோடா கார்களுக்கான ஆஃபர் தொடர்பான அனைத்து விபரங்களையும் அருகிலுள்ள ஸ்கோடா டீலர் மூலமாக முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரியில் கார் முன்பதிவு செய்ய காத்திருக்கும் தமிழர்களுக்கு இந்த விலை உயர்வு அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை தருவதாக உள்ளது. எனினும், வரும் 31ந் தேதிக்குள் காருக்கான இன்வாய்ஸ் போடப்பட்டால் பழைய விலையில் கிடைக்கும். அதேநேரத்தில், இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களையே டெலிவிரி பெறமுடியும்.


Click it and Unblock the Notifications








