பிஎஸ்-4 வாகன விற்பனை விதிமீறல்... வழக்கு விசாரணை 31ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பிஎஸ்-4 வாகன விற்பனையில் நடந்த விதிமீறல் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கி உள்ளது. அத்துடன், இந்த வழக்கு விசாரணையை வரும் 31ந் தேதி ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் மட்டுமே இந்தியாவில் வாகன விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இந்த சூழலில், நாடு முழுவதும் வாகன உற்பத்தி நிறுவனங்களின் யார்டுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பல லட்சம் பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கின.

கடந்த மார்ச் இறுதியில் கொரோனா காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விற்பனை முற்றிலும் முடங்கியது. இந்த சூழலில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் டீலர்களுக்கு இருப்பில் தேங்கிய பிஎஸ்-4 வாகனங்களால் பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வாகன டீலர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், டீலர்களில் பல லட்சம் பிஎஸ்-4 வாகனங்கள் தேங்கி இருப்பதாகவும், அதனை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே போதிய கால அவகாசம் வழங்கப்பட்டதாக கூறியது.

மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தை மனதில் வைத்து இருப்பில் தேங்கி இருக்கும் 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்து கொள்ள அனுமதித்தது. அதுவும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட தேதியில் இருந்து 10 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், தேசிய தலைநகர் டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்தியத்திற்கு இந்த சலுகை பொருந்தாது என்றும் உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு டீலர்கள் தீவிரம் காட்டினர். மேலும், உச்சநீதிமன்றம் அனுமதித்த எண்ணிக்கையை விட மிக அதிமகாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

அதாவது, 1.05 லட்சம் பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், நாடு முழுவதும் 2.55 லட்சம் பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, இருப்பில் உள்ள 10 சதவீத பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுவதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்தது.

மேலும், கடந்த மார்ச் 31க்கு பிறகு விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு குறித்த விபரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், வாகன பதிவு விபரங்களை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் கேட்டது.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 31ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. எனவே, அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணையில் முக்கிய முடிவை உச்சநீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏப்ரல் 1க்கு பிறகு விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்கள் மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சத்திலும்,குழப்பத்திலும் டீலர்களும், உரிமையாளர்களும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








