பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு... ஆனா, பல கண்டிஷன்!
பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை உச்சநீதிமன்றம் சற்றே நீடித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

வரும் ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கான கடுமையான பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், வரும் மார்ச் 31 வரை மட்டுமே பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்குமான கடைசி நாளாக காலக்கெடு விதிக்கப்பட்டது.

இதையடுத்து, கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகன நிறுவனங்களும், அதன் டீலர்களும் வரும் 31ந் தேதிக்குள் கையிருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வந்தன. பல நிறுவனங்கள் பிஎஸ்4 இருப்பை முற்றிலும் தீர்த்துவிட்டு, பிஎஸ்6 வாகனங்களின் டெலிவிரி செய்வதில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டன.

ஆனால், சில நிறுவனங்களின் பிஎஸ்4 வாகனங்கள் கையிருப்பில் தேங்கிவிட்டன. இதனை விற்பனை செய்வதற்கான காலக்கெடு மிக குறைவாக இருந்த நேரத்தில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டது.

ஊரடங்கு உத்தரவால், மக்கள் வெளியே வரவில்லை என்பதுடன், பணியாளர்கள் பாதுகாப்பு கருதி நாட்டின் பெரும்பாலான டீலர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், விற்பனை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், பிஎஸ்4 எஞ்சின் பொருத்தப்பட்ட 7 லட்சம் இருசக்கர வாகனங்களும், 12,000 கார்களும், 8,000 வர்த்தக வாகனங்களும் இருப்பில் தேங்கி இருப்பதாக அண்மையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகின. இதன் மதிப்பு பல்லாயிரம் கோடி எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தருமாறு இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு (FADA) சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. முதலில் மனுவை உடனடியாக விசாரிக்க ஏற்க மறுத்த நீதிமன்ற அமர்வு, ஒருவழியாக இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணை செய்தது.

இந்த விசாரணையின்போது, கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மற்றும் நெருக்கடிகளை டீலர்கள் கூட்டமைப்பு சார்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதிகள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஏப்ரல் 14 தேதியிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு (ஏப்ரல் 24) வரை மட்டுமே பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்ய அனுமதித்துள்ளனர்.

அதிலும் சில நிபந்தனைகளை தெரிவித்துள்ளனர். அதாவது, இருப்பில் இருக்கும் 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர். மேலும், டெல்லி உள்ளடக்கிய மத்திய மண்டல பிராந்தியத்தில் பிஎஸ்6 வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 10 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். காலக்கெடு நீடிக்கப்பட்டது ஒருபுறம் டீலர்களுக்கு ஆறுதல் தந்தாலும், நிபந்தனைகள் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில், வரும் ஏப்ரல் 15 முதல் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் இயல்பு வாழ்க்கை சீரடைந்தால் மட்டுமே ஓரளவு விற்பனை செய்ய முடியும். அதிலும், 10 நாட்களுக்குள் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பில் தேங்கி உள்ள பிற வாகனங்கள் அனைத்தையும், வாகன உற்பத்தி நிறுவனங்களிடமே திரும்ப வழங்குவது குறித்து முயற்சி செய்து வருவதாக டீலர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








