ஏப்ரல் 1க்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் பதிவு செய்யப்படுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்?
ஃபடா (FADA) எனப்படும் ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்கள் கூட்டமைப்பின் பிஎஸ்4 வாகனங்கள் பதிவு செய்தல் தொடர்பான மனுவை ஏற்று உச்சநீதீமன்றம் தனது இறுதி தீர்ப்பை விரைவில் வெளியிடவுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளினால் 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு வாங்கப்பட்டு இன்னும் பதிவு செய்யப்படாத பிஎஸ்4 வாகனங்களை ஆர்.டி.ஒ அலுவலங்களை பதிவு செய்ய அனுமதிக்குமாறு ஃபடா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.

முதலில் கடந்த 2020 மார்ச் மாதத்தில், விற்பனை இழப்பு ஏற்பட்டதால், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும் பதிவு செய்வதற்கும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு கோரி ஃபடா மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், விற்கப்படாமல் இருக்கும் பிஎஸ்4 வாகனங்களில் 10 சதவீதத்தை, அதாவது 1.05 லட்ச யூனிட்களை முதற்கட்ட ஊரடங்கு தளர்விற்கு பிறகு 10 நாட்களுக்கு விற்க அனுமதி அளித்தது.

இருப்பினும், விநியோகஸ்தர்கள் வரம்பை மீறி 2.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ் 4 வாகனங்களை விற்றதினால் அந்த நீதிமன்ற உத்தரவு உடனடியாக திரும்ப பெற்று கொள்ளப்பட்டுவிட்டது. மேலும் இந்த 10 நாட்களில் விற்கப்பட்ட கூடுதல் வாகனங்கள் பதிவு செய்யப்படாது என்றும் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது.

அதன்பின் 2020 ஆகஸ்டில், போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ போர்டல் வாகானில் பதிவேற்றப்பட்ட பிஎஸ்4 இணக்கமான வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், ஆயிரக்கணக்கான பிஎஸ்4 வாகனங்களை இன்னும் பதிவு செய்ய முடியவில்லை.

ஏனெனில் ஊரடங்கினால் விநியோகஸ்தர்கள் வாகன் போர்ட்டலில் வாகனங்களை பதிவேற்ற முடியவில்லை. அதன்பின் 2020 செப்டம்பரில், அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் பொது பயன்பாட்டு சேவைகளில் நகராட்சி நிறுவனங்கள் மற்றும் தில்லி காவல்துறையால் பயன்படுத்தப்பட வேண்டியிருந்ததால் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னர் வாங்கிய டீசல் வாகனங்களை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதித்தது.

மேலும் அந்த தீர்ப்பில், சி.என்.ஜி வாகனங்களும் அடங்கின. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 24) 2020 ஏப்ரல் 1க்கு பிறகு விற்கப்பட்ட அனைத்து பிஎஸ்4 வாகனங்களையும் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஃபடாவின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.

இதனால் இன்று (நவம்பர் 24) தங்களக்கு மகிழ்ச்சியான நாள். இறுதி தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். நாளை உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அணுகுமாறு ஃபடா கூட்டமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாடி நேற்று அறிவித்திருந்தார். இன்னும் இறுதி தீர்ப்பு வெளிவரவில்லை.


Click it and Unblock the Notifications








