உலக இவி தின கொண்டாட்டத்தில் இணைந்தது இந்தியாவின் டாடா மோட்டார்ஸ்...
#உலகஇவிதினம் என்ற உலகளாவிய இயக்கத்துடன் இணைந்து மாசு இல்லா போக்குவரத்திற்கு மாறுதலை கொண்டாடவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலக இவி தினம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசை கருத்தில் கொண்டு தற்சமயம் இவி வாகனங்களை பயன்படுத்துவோரையும், எதிர்காலத்தில் இவி கார்களை வாங்கும் திட்டம் வைத்துள்ளவர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக இத்தினம் கொண்டாடப்படவுள்ளது.

இந்தியாவில் இவி வாகனங்களின் பயன்பாடு தற்சமயம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இதனால் இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க உள்ளூர் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் சிறிதாக சிறிதாக இவி வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.

இந்த நிலையில் இவி தினம் கொண்டாடுவது குறித்து டாடா வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா மோட்டார்ஸ் #உலகஇவிதினத்தை அறிமுகப்படுத்திய ஸ்வீடிஷ்-சுவிஸ் நாட்டை சேர்ந்த ஏபிபி மற்றும் க்ரீன்.டி.வி உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டணி நிறுவனங்களுள் ஒன்று என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிக பிரிவு இயக்குனர், ஷைலேஷ் சந்திரா கூறுகையில், "கடந்த பல மாதங்களாக இந்தியா இவி வாகனங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அத்தகைய இவி வாகனங்களை தயாரிப்பதில் டாடா மோட்டார்ஸ் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக அணுகக்கூடிய மின்சார வாகனங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களின் போக்குவரத்திற்கான முழுமையான மின்-இயக்கம் சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்கி வருகிறோம்.

எதிர்காலத்தில் நிலையான மற்றும் பூஜ்ஜிய- மாசு உமிழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கும் மின் இயக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த உலகளாவிய #உலகஇவிதினம் இயக்கத்தில் சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என தெரிவித்தார்.

அதேபோல் கூட்டணி நிறுவனமான க்ரீன் டிவி-ன் நிறுவனர் அடே தாமஸ் கருத்து தெரிவிக்கையில், "போக்குவரத்தை எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு திருப்பும் முயற்சியாக கொண்டாடவுள்ள உலக இவி தினம் என்பது உலகளாவிய இயக்கம் ஆகும். அத்தகைய நாளில் இந்தியாவில் இந்த பரிணாம வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

காலநிலை மாற்றம் மற்றும் தற்சமயம் காற்றின் தரம் குறித்த விழிப்புணர்வாகவும் இந்த தினம் கொண்டாடப்படும்" என கூறினார். இந்தியாவில் இவி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் விதமாக ‘டாடா யூனிவெர்ஸ்' என்ற பெயரில் புதிய செயல்முறை திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது.

இந்தியாவில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு முழுமையான மற்றும் சாத்தியமான சூழலை உருவாக்க மற்ற டாடா குழும நிறுவனங்களின் பலம் மற்றும் நிபுணத்துவத்தின் வெளிப்பாடாக இந்த திட்டம் விளங்குகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்சமயம் இந்திய சந்தையில் டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி என்ற இரு எலக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் டிகோர் இவி காரில் பிராண்டின் குறைந்த மின்னழுத்த எலக்ட்ரா மோட்டாரும், நெக்ஸான் இவி-ல் அதிக மின்னழுத்த கட்டமைப்பை ஏற்கக்கூடிய ஜிப்ட்ரோன் தொழிற்நுட்பமும் பொருத்தப்படுகிறது.

அரசு அலுவலக பயன்பாடுகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நெக்ஸான் இவி காரை அதேநேரம் தனி பயன்பாட்டிற்காகவும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். எக்ஸ்ஷோரூமில் இந்த எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி-யின் விலை ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.15.99 லட்சம் வரையில் உள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைக்கு கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் மிகவும் மலிவானதாக விளங்கும் நெக்ஸான் உள்ளிட்ட தயாரிப்புகளால் டாடா மோட்டார்ஸ் இந்திய போக்குவரத்தை எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








