அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு... இந்திய அரசாங்க பணிகளில் டிகோர் எலக்ட்ரிக் கார்கள்...
இந்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இவி கார்களை டெலிவிரி செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸ் இந்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த அமைச்சகத்தில் ஆயுர்வேதா, யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமோபியோபதி உள்ளிட்ட துறைகள் அடங்குகின்றன.

டிகோர் இவி கார்களின் முதல் தொகுப்பு எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ராஜ் குமார் லுத்ரா, இணை செயலாளர் பி.என்.ரஞ்சித் குமார் ஆகியோரின் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட டிகோர் இவி மாடலை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது.

எக்ஸ்இ+, எக்ஸ்எம்+ மற்றும் எக்ஸ்டி+ என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுவரும் இந்த எலக்ட்ரிக் காம்பெக்ட் செடான் காரின் இந்த வேரியண்ட்களின் விலைகள் எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.9.54 லட்சம், ரூ.9.70 லட்சம் மற்றும் ரூ.9.85 லட்சம் என்ற அளவில் உள்ளன.

ஆனால் டிகோர் இவி கார் தற்போது அரசாங்க துறைக்கு டிபிசிசி மற்றும் ஃபேம் உள்ளிட்ட ஊக்கத்தொகைகள் கழிக்கப்பட்டே வழங்கப்பட்டிருக்கும். அதேபோல் முன்பக்க க்ரில் உள்ளீடுகள் மற்றும் சக்கர கவர்கள் போன்ற கூடுதல் கிட்டிற்கு கூடுதலாக எவ்வளவு தொகை சேர்க்கப்பட்டது என்பது குறித்த தகவலும் கிடைக்க பெறவில்லை.

டிகோர் இவி காரின் நீட்டிக்கப்பட்ட ரேஞ்ச் 213கிமீ தூரத்திற்கு இயங்கும் என ஏஆர்ஏஐ அமைப்பு சான்றழித்துள்ள நிலையில் இதன் ஸ்டாண்டர்ட் மாடல் அதிகப்பட்சமாக 142கிமீ தூரம் வரையில் மட்டுமே இயங்கும் ஆற்றல் கொண்டது. ஏனெனில் டிகோர் இவி காரின் அப்டேட் வெர்சனில் 16.2 kWh தொகுப்பிற்கு மாற்றாக 21.5 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ரேஞ்ச் சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆற்றல்மிக்க பேட்டரி, 72 வோல்ட், 3-பேஸ் ஏசி தூண்டல் மோட்டாரில் பொருத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 4,500 ஆர்பிஎம்-ல் 41 பிஎச்பி மற்றும் 2,500 ஆர்பிஎம்-ல் 105 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

இந்த ஆற்றல்கள் சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழியாக முன் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ட்ரைவ் & ஸ்போர்ட் என்ற இரு விதமான ட்ரைவிங் மோட்கள் வழங்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஏசி மற்றும் டிசி என இரு விதமான விரைவு சார்ஜர்களையும் பயன்படுத்த முடியும்.

14 இன்ச்சில் அலாய் சக்கரங்களை கொண்டுள்ள டிகோர் இவி காரில் சிறப்பம்சங்களாக சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, எல்இடி டெயில்லேம்ப்கள், ப்ளூடூத் உடன் ஹார்மனின் 2-டின் ஆடியோ சிஸ்டம், அக்ஸ் & யுஎஸ்பி இணைப்பு மற்றும் உயரத்தை சரி செய்யும் வகையிலான ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை உள்ளன.

இருப்பினும் இந்த வசதிகள் அனைத்தும் டிகோரின் டாப் ட்ரிம்மிற்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் எண்ட்ரீ-லெவல் எக்ஸ்இ+ ட்ரிம் ஓட்டுனருக்கு மட்டும் ஒரே ஒரு பக்கவாட்டு காற்றுப்பையையும், எக்ஸ்எம்+ மற்றும் எக்ஸ்டி+ வேரியண்ட்கள் ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் இரட்டை காற்றுப்பைகளையும் பெற்று வருகின்றன.

டாடா நிறுவனம் டிகோர் இவி காருக்கு ரோமன் சில்வர், எகிப்தியன் நீலம் மற்றும் முத்தின் வெள்ளை என்ற மூன்று நிறத்தேர்வுகளை வழங்குகிறது. ஆனால் தற்போது அரசாங்கத்திடம் சென்றுள்ள மாதிரி கார்கள் அரசாங்க பணிகளுக்காக வெள்ளை நிறத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








