கொரோனா பிடியில் சிக்கிய அமெரிக்கா... உதவிகளை வாரி வழங்கும் எலான் மஸ்க்!
கொரோனா பிடியில் சிக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்களை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் எலான் மஸ்க்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதுவரை 1.04 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அங்கு முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அனைத்து விதமான வர்த்தக ஸ்தாபனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறை சம்பந்தப்பட்ட அனைத்து ஆலைகளும் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கார் உற்பத்தி நிறுவனங்கள் வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளை தயாரித்து வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, அங்குள்ள நிறுவனங்கள் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட உள்ளன.

இந்த சூழலில், அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா கார் நிறுவனமும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்தாபகரான எலான் மஸ்க், அங்குள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கு, முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கிறார்.

தவிரவும், தனது ஜிகாஃபேக்டரி கார் ஆலைகளில் வென்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்டவற்றை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். இதுதொாடர்பாக, அவர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதுதவிர, வென்டிலேட்டர்களை வாங்கியும் மருத்துவமனைகளுக்க வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களை வழங்குவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் எலான் மஸ்க்.

டெஸ்லா நிறுவனம் போன்றே, அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு உள்ளிட்ட கார் நிறுவனங்களும் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளன.


Click it and Unblock the Notifications








