பாதசாரிகளை எச்சரிக்க ஹாரன் தேவையில்லை... இப்படி ஒரு வசதியை எந்த கார் நிறுவனமும் இதுவர வழங்கல... என்ன தெரியுமா?
பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அப்டேட்டின் வாயிலாக இதுவரை எந்தவொரு நிறுவனமும் வழங்காத சிறப்பு வசதியை வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பல ஆண்டுகள் காத்திருப்பு பின்னர் டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருப்பது தற்போதே உறுதியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் மின்சார கார்கள் வரும் 2021ம் ஆண்டில் அறிமுகமாக இருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இணையம் முழுவதும் டெஸ்லா வருகை பற்றிய தகவலே ஆதிக்கம் செய்த வண்ணம் இருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் புதிய சாப்ட்வேர் அப்டேட் பற்றிய தகவலும் இணையத்தில் வைரலாகத் தொடங்கியிருக்கின்றது.

இந்நிறுவனம் அப்டேட்டின் வாயிலாக பூம்பாக்ஸ் எனும் சிறப்பு வசதியை வழங்க இருப்பதாக அத்-தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அப்டேட்டின் வாயிலாக எக்கசக்க வசதிகளைப் பெற முடியும் என டெஸ்லா தெரிவிக்கின்றது. குறிப்பாக, வழக்கமான ஹார்ன் சத்தத்திற்கு பதிலாக விநோத ஒலியை எழுப்ப முடியும் என அது கூறியுள்ளது.

அதாவது, ஆடு கத்துவது, இசை வாசிப்பது போன்ற மிகவும் கவர்ச்சிகரமான சப்தத்தை எழுப்ப முடியும். இதுவே புதிய சாப்ட்வேர் அப்டேட்டின் முக்கிய அம்சம் ஆகும். ஆகையால், டெஸ்லா பயனர்கள் வழக்கமான ஹாரன்களுக்கு பதிலாக விநோதமான, எளிதில் பிறரை ஈர்க்கக்கூடிய ஒலியின் மூலம் பிறரை கவர்வார்கள் என்பது உறுதியாக தெரிகின்றது.

கை தட்டுதல் மற்றும் வழி விடுங்கள் எனும் மனித குரல் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் ஹாரனாக ஒலிக்க முடியும். மேலும், தங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட இசைகளையும் இதில் சேர்த்துக் கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அப்டேட் டெஸ்லா தானியங்கி மின்சார கார் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. மிக சமீபத்தில் இந்நிறுவனம் அப்டேட்டின் வாயிலாக மூன்று வீடியோ கேம்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தது. இம்மாதிரியான சூழ்நிலையில் புதிய பூம் பாக்ஸ் அப்டேட் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 1ம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட அனைத்து டெஸ்லா மின்சார கார்களிலும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலமே விரும்பிய ஒலியை புதிய சாப்ட்வேர் அப்டேட்டின் வாயிலாக ஒலிக்கச் செய்ய முடியுமாம். பாதசாரிகளைப் பிரத்யேக குரல் ஒலி மூலம் எச்சரிக்க முடியும். இத்துடன், ஐஸ் கிரீம் டிரக் மற்றும் பிற வாகனங்களைப் பிரதிபலிக்கக் கூடிய விநோத ஒலியையும் இதன் மூலம் எழுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டெஸ்லா நிறுவனம் அறிமுகமாகிய ஒரு சில ஆண்டுகளிலேயே உலகின் மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கின்றது. எனவேதான் இந்நிறுவனத்தின் இந்திய அறிமுகம் பற்றிய தகவல் ஆட்டோமொபைல் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








