தாய்லாந்து காவல் பணியில் இணைந்த டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... ஒரு காரோட விலை இவ்வளவா..?
உலகில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களில் ஒன்றான டெஸ்லா மாடல் 3 தாய்லாந்து நாட்டு போலீஸாரின் பாதுகாப்பு பணியில் இணைந்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

தாய்லாந்து போலீஸ் பணியில் ஈடுப்படவுள்ள இந்த டெஸ்லா கார் குறித்து அந்நாட்டு போலீஸாரின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் அடுத்த 5 வருட பயன்பாட்டிற்காக மொத்தம் 7 டெஸ்லா மாடல் 3 கார்கள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாங்காக், டுஸிட் நகரில் உள்ள தாய்லாந்து போலீஸாரின் தலைமையகத்தில் டெலிவிரி செய்யப்ப்பட்டுள்ள இந்த 7 டெஸ்லா மாடல்களும் போலீஸாரின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக லைட் பார்கள் மற்றும் கணினிகளுடன் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளன.

இந்த கஸ்டமைஸ்ட் மாற்றங்கள் எல்லாம் சேர்த்து இந்த 7 கார்களுக்காக தாய்லாந்து போலீஸார் 2.7 மில்லியன் டாலர்களை (ரூ.20.8 கோடி) செலவழித்துள்ளனர். இதன்படி பார்த்தோமேயானால், ஒவ்வொரு டெஸ்லா மாடல் 3 காரும் தலா ரூ.2.96 கோடியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க சந்தையில் டெஸ்லா மாடல் 3 காரின் ஆரம்ப விலை வெறும் 56,990 டாலர்களாக (ரூ.43.84 லட்சம்) உள்ளது. ஆனால் தாய்லாந்து போலீஸார் அதிகப்படியான விலையை செலுத்தியதற்கு, அந்நாட்டில் அனைத்து விதமான எலக்ட்ரிக் கார்களும் அதிக அளவிலான தொகையை விலையாக கொண்டிருப்பது தான் காரணம்.

தாய்லாந்தில் எலக்ட்ரிக் கார்களின் விலை சராசரியாக 64,675 டாலர்களாக உள்ளது. தாய்லாந்தின் அண்டை நாடான சிங்கப்பூரில் இன்னும் அதிகம். அங்கு சராசரியாக எலக்ட்ரிக் கார்கள் 110,326 டாலர்களை விலையாக கொண்டுள்ளன. அதிவேக துரத்தல்களுக்கு ஏற்ற வகையில் இந்த மாடல் 3 கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்து போலீஸாரின் விவிஐபி வாகனங்களில் முதன்மையான கார் மாடல்களாக விளங்கவுள்ளன.

இந்த எலக்ட்ரிக் காரில் 75 kWh பேட்டரி தொகுப்பு, அனைத்து சக்கர ட்ரைவ் உள்ளமைவிற்காக இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைந்து ஆற்றலை காருக்கு வழங்கவுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலம் அதிகப்பட்சமாக 450 பிஎச்பி பவரையும், 639 என்எம் டார்க் திறனையும் பெற முடியும்.

0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் அடைந்து விடக்கூடிய இந்த எலக்ட்ரிக் கார் அதிகப்பட்சமாக 261 kmph வேகத்தில் இயங்கும். இந்த கார் சிங்கிள் சார்ஜில் 518 கிமீ தூரம் வரை இயங்கக்கூடியது என இபிஏ அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

தாய்லாந்து மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளும் டெஸ்லாவின் தயாரிப்பு கார்களை அரசாங்க பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றன. உதாரணமாக, தைவான் இராணுவம் 20 டெஸ்லா மாடல் 3 கார்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் பெரும்பான்மையான போலீஸ் அதிகாரிகள் டெஸ்லா கார்களை தான் பயன்படுத்தி வருகின்றன.

எந்த நாட்டு போலீஸாராக இருந்தாலும் பராமரிப்பு செலவு மற்றும் எரிபொருள் செலவு குறைவாக உள்ள கார்களை தான் வாங்க விரும்புவர். அதற்கு டெஸ்லாவின் தயாரிப்புகள் மிகவும் ஏற்றதாக இருக்கும். இதுவே இந்நிறுவனத்தை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. மேலும் இவற்றின் மூலம் காற்று மாசு ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள NHTSA, ஐரோப்பிய NCAP மற்றும் ANCAP உள்ளிட்ட உலகின் முன்னணி அமைப்புகளிடம் இருந்து டெஸ்லா மாடல் 3 பயணிகளின் பாதுகாப்பு சோதனையில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. இதனால் உலகின் பாதுகாப்பான கார்களுள் ஒன்றாக இது விளங்குகிறது.
Image Courtesy: TeslaDriveCanada


Click it and Unblock the Notifications








