அடுத்த கட்டத்திற்கு போகும் கேரளா... நாளை திறந்து வைக்கிறார் பினராய் விஜயன்... மேட்டர் என்ன தெரியுமா?
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் கேரளா, அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. ஆனால் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லை. இதன் காரணமாக மின்சார வாகனங்களை வாங்குவதை பலர் தவிர்க்கின்றனர்.

அதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் வாகனங்களையே தொடர்ந்து வாங்குகின்றனர். இது காற்று மாசுபாடு பிரச்னைக்கு முக்கியமான காரணமாக அமைகிறது. அத்துடன் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு பிரச்னைக்கும் காரணமாகிறது. எனவே மின்சார வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்த வகையில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், கூடுதலாக நான்கு புதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. மின்சார வாகன உரிமையாளர்களுக்கும், மின்சார வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில், இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்படவுள்ளன.

இந்த புதிய சார்ஜிங் ஸ்டேஷன்களை, கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், நாளை (நவம்பர் 7) திறந்து வைக்கவுள்ளார். இந்த 4 சார்ஜிங் ஸ்டேஷன்களில் மூன்றை, மாற்று ஆற்றல் மற்றும் கிராமப்புற தொழில்நுட்பத்திற்கான நிறுவனம் அமைத்துள்ளது. எஞ்சிய ஒன்றை, கேரள மாநில மின்சார வாரியம் அமைத்துள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Ltd) நிறுவனத்துடன் இணைந்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், மாற்று ஆற்றல் மற்றும் கிராமப்புற தொழில்நுட்பத்திற்கான நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள சார்ஜிங் ஸ்டேஷன்கள், இரண்டு வகையான சார்ஜிங் யூனிட்களை கொண்டிருக்கும்.

அதாவது 15KW சார்ஜிங் பாயிண்ட் மற்றும் இரண்டு 60KW சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் 22KW சார்ஜிங் பாயிண்ட்டுடன் காம்போ சார்ஜிங் பாயிண்ட் என இரண்டு வகையான சார்ஜிங் யூனிட்களை கொண்டிருக்கும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''சந்தையில் தற்போது கிடைக்கும் மின்சார கார்களை, இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் மூலம் சார்ஜ் செய்யலாம்.

டாடா டிகோர் மற்றும் மஹிந்திரா இ வெரிட்டோ போன்ற கார்களை, 15KW சார்ஜிங் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்யலாம். ஹூண்டாய் கோனா, டாடா நெக்ஸான், எம்ஜி இஸட்எஸ் போன்ற பெரிய எலெக்ட்ரிக் கார்களை, காம்போ சார்ஜிங் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்யலாம்'' என்றனர். மின்சார வாகனங்களின் பேட்டரிகளை வெறும் 20 நிமிடங்களில் 80 சதவீதம் வரை நிரப்பி விடும் திறன் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு உண்டு.

இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களின் சேவை, முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக இருக்கும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயன், நாளை மதியம் 3 மணியளவில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் உதவும்.


Click it and Unblock the Notifications








