தந்திராஸ் பண்டிகையில் டொயோட்டா கார்கள் விற்பனை, முன்பதிவு உயர்வு... எவ்வளவு சதவீதம் தெரியுமா?
தந்திராஸ் பண்டிகையின்போது டொயோட்டா நிறுவன கார்களின் விற்பனை மற்றும் முன்பதிவு உயர்ந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட சரிவிற்கு பிறகு சமீப காலமாகதான் கார்களின் விற்பனை உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு இந்தியாவில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. அதன்பின் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதால், கார்களின் விற்பனை மீண்டும் ஓரளவிற்கு உயர தொடங்கியது.

மே மாதத்திற்கு பிறகு படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்த கார்களின் விற்பனை, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மிகவும் சிறப்பாக இருந்தது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் தவிர்ப்பது இதில் ஒன்றாகும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பேருந்து, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தினால், கொரோனா தொற்று ஏற்படலாம் என மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அதற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக புதிய கார்களின் விற்பனை உயர்ந்திருக்கலாம் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர தற்போதைய பண்டிகை காலமும் புதிய கார்களின் விற்பனை உயர்வதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு, மாருதி சுஸுகி மற்றும் டாடா போன்ற இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

இந்த வரிசையில் டொயோட்டா நிறுவனமும் சிறப்பான முன்பதிவுகளை பெற்றுள்ளதுடன், சிறப்பான விற்பனை எண்ணிக்கையையும் பதிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு தந்திராஸ் பண்டிகையின்போது, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பெற்ற முன்பதிவுகளின் எண்ணிக்கை 10-13 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

பாரம்பரியமாக தந்திராஸ் பண்டிகையை சுப நாளாக மக்கள் கருதுகின்றனர். எனவே தந்திராஸ் பண்டிகையின்போது நகைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் வாகனங்களை முன்பதிவு செய்வது மற்றும் டெலிவரி எடுப்பதும் நல்ல காரியமாக கருதப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கும் மேலாக கொண்டாடப்பட்டது. இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டர் நிறுவனத்தின் சேல்ஸ் & சர்வீஸ் பிரிவு மூத்த துணை தலைவர் நவீன் சோனி கூறுகையில், ''2019ம் ஆண்டு தந்திராஸ் பண்டிகையுடன் ஒப்பிடும்போது விற்பனையும் 12 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது.

அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது நவம்பர் விற்பனை இன்னும் நேர்மறையாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்'' என்றார். இதற்கிடையே பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா ஆலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால், உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கார்களின் டெலிவரி பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








