2020ல் இந்திய சந்தையில் களமிறங்கவுள்ள டாப்-5 எலக்ட்ரிக் கார்கள்...
புதிய 2020ஆம் வருடத்தில் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்கள் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளன. எலக்ட்ரிக் கார்கள் கடந்த ஆண்டில் இருந்தே அறிமுகமாகி வந்தாலும் இந்த வருடத்தில் 2019ஆம் வருடத்தை விட கூடுதலாக எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் களமிறங்கவுள்ளன.
அந்த வகையில் இந்த வருடத்தில் குறைந்தது 5 எலக்ட்ரிக் கார்களாவது சந்தையில் அறிமுகமாகக்கூடும். அவ்வாறு அறிமுகமாக அதிக வாய்ப்புள்ள 5 கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா இ-கேயூவி100
மஹிந்திரா நிறுவனம் 2020ல் இ-கேயூவி 100 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த ஆண்டில் கூறியிருந்தது. இதனால் இந்த காரின் பொது சாலை சோதனை ஓட்டங்கள் கடந்த வாரங்களில் சில முறை நடைபெற்றதை பார்த்திருப்போம்.

இத்தகைய சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்ட இ-கேயூவி100 மாடலில் 15.9 kWh லித்தியம்-இரும்பு பேட்டரியை மஹிந்திரா நிறுவனம் பொருத்தியிருந்தது. இந்த பேட்டரி அதிகப்பட்சமாக சிங்கிள் சார்ஜில் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

இந்த பேட்டரியை கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் 53 பிஎச்பி பவரையும் 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அடுத்த மாதம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார் வருகிற ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் இவி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் இவி மாடலை நடைப்பெற்று வருகின்ற இந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நெக்ஸான் மட்டுமின்றி மேலும் சில மாடல்களையும் எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றி வரும் டாடா நிறுவனம் தனது அனைத்து எலக்ட்ரிக் கார்களிலும் அகற்ற முடியாத காந்தக ஏசி மின்னோட்ட மோட்டாரை பொருத்தியுள்ளது.

30.2kWh லித்தியம்-இரும்பு பேட்டரி மூலம் ஆற்றலை பெறுகின்ற இந்த எலக்ட்ரிக் மோட்டார் ஐபி67 சான்றிதழை பெற்றுள்ளது. சிங்கிள் சார்ஜில் 300 கிமீ தூரம் இயங்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள நெக்ஸான் இவி காரின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 80 சதவீதத்தை வெறும் ஒரு மணிநேரத்தில் அடைந்துவிடும்.

அதேநேரம் வழக்கமான சார்ஜர், பேட்டரியை முழுவதும் நிரப்ப 8 மணிநேரங்களை எடுத்து கொள்கிறது. கடந்த சில மாதங்களாகவே தயாரிப்பு பணி மற்றும் சோதனை ஓட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் காரானது எக்ஸ்எம், எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட்+ லக்ஸ் என மூன்று ட்ரீம்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

எம்ஜி இசட்எஸ் இவி
இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் களமிறங்கும் இரண்டாவது மாடலாக இசட்எஸ் இவி கார் இந்த ஜனவரி மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. 140.7 பிஎச்பி பவர் மற்றும் 353 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கக்கூடிய 3-பேஸ் அகற்ற இயலாத ஒத்தியங்கு எலக்ட்ரிக் காந்தக மோட்டாரை எம்ஜி நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது.

இந்த எலக்ட்ரிக் மோட்டாருடன் 44.5 kWh ஆற்றல் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. எக்ஸைட், எக்ஸ்க்ளுசிவ் என இரு வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகமாகவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை கடந்த வாரத்தில் துவங்கியிருந்த இந்நிறுவனம் இந்த காரை இந்தியாவில் குறிப்பிட்ட 5 நகரங்களில் இருந்து மட்டும் தான் முதலில் விற்பனை செய்யவுள்ளது. அந்த 5 நகரங்கள் என்னென்ன என்பது உள்பட கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஆடி இ-ட்ரான்
அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டு செம்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியிருந்த இ-ட்ரான் எலக்ட்ரிக் மாடலை இந்தியாவில் இந்த புதிய வருடத்தின் முதல் கால் பகுதியில் அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராக அறிமுகமாவது மட்டுமில்லாமல் எஸ்யூவி ரக காராகவும் இந்தியாவில் இ-ட்ரான் களமிறங்கவுள்ளது.

இந்த இ-ட்ரான் எலக்ட்ரிக் காரில் இரு மின் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் முன்புற சக்கரங்களுக்கு இடையே பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 167 பிஎச்பி பவரையும் , பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் 188 பிஎச்பி ஆற்றலையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகின்றன. மொத்தமாக 355 பிஎச்பி பவருடன் இயங்கக்கூடிய இந்த காரின் அதிகப்பட்ச டார்க் திறன் 561 என்எம் ஆகும்.

பூஸ்ட் மோடில் காரை இயக்கினால் வெளியிடப்படும் ஆற்றலின் அளவு 408 பிஎச்பி வரையில் கூட அதிகரிக்கக்கூடும். சிங்கிள் சார்ஜில் 400 கிமீ தூரம் வரை இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகம் 200 kmph ஆகும். இ-ட்ரான் காரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.0 கோடி வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

போர்ஷே டைக்கான்
போர்ஷே நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக டைக்கான் மாடலை கடந்த ஆண்டில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆடி இ-ட்ரான் மாடலை போல இரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இந்த கார், போர்ஷே நிறுவனத்தின் மிஷன் இ கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் காரின் இரு மோட்டர்களும் மொத்தமாக 600 பிஎச்பி வரையில் ஆற்றலை காருக்கு வழங்குகின்றன. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள அதிக வோல்டேஜ் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரியால் சிங்கிள் சார்ஜில் டைக்கான் இவி கார் சுமார் 500 கிமீ வரையில் இயக்கும் திறனை பெற்றுள்ளது. இந்த எலக்ட்ரிக் மாடலின் அறிமுகம் இந்த ஆண்டில் மே- ஜூலை மாதங்களுக்கு இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐந்து எலக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி சீன கார் தயாரிப்பு நிறுவனமான கிரேட்வால் மோட்டார்ஸும் தனது முதல் இந்திய அறிமுக மாடலாக ஒரா ஆர்1 எலக்ட்ரிக் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்காக வைக்கவுள்ளது. உலக சந்தையில் விலை குறைவான எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதில் பெயர் போனது இந்த கிரேட்வால் நிறுவனம்.

இந்தியாவில் இந்த சீன நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஒரா ஆர்1 எலக்ட்ரிக் கார் சீனாவில் 59,800 யுவனில் இருந்து 77,800 யுவன் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.6- 9 லட்சமாகும். கிரேட்வாலின் இந்த ஒரா ஆர்1 எலக்ட்ரிக் மாடலானது 35 kW மோட்டாரை கொண்டுள்ளது. இந்த மோட்டார் சிங்கிள் முழு சார்ஜில் 351 கிமீ வரையில் காரை இயக்கும் ஆற்றல் கொண்டது.

இந்திய சந்தையில் 2020ல் இவ்வாறு அடுத்தடுத்து எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது இந்திய போக்குவரத்தின் காற்று மாசை சிறிது குறைக்கும் நம்பலாம். இதில் ஆடி மற்றும் போர்ஷே நிறுவனங்களின் கார்களை தவிர மற்ற அனைத்தும் பட்ஜெட் விலைகளை தான் பெறும் என நம்புவோம். குறிப்பாக மஹிந்திரா, டாடா நிறுவனங்கள் மற்ற எரிபொருள் என்ஜின் கார்களுடன் போட்டியிடுவதற்காக நிச்சயம் விலையை மிடில் க்ளாஸ் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விதத்தில் தான் நிர்ணயிக்கும்.


Click it and Unblock the Notifications








