கடனில் கார் வாங்கிவிட்டு இனி கம்பி நீட்ட முடியாது... டொயோட்டாவின் அதிரடி திட்டம்!
கடன் திட்டத்தில் வாங்கப்படும் கார்களை கண்காணிக்கும் விதமாக புதிய திட்டத்தை டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்கள் கடன் திட்டத்தில்தான் வாங்கப்படுகின்றன. குறைந்த அளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே ரொக்கத்திற்கு வாங்குகின்றனர். மேலும், கார்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களில் முறைகேடுகளும், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.

வாடிக்கையாளர்கள் பலர் சரியாக கட்டினாலும், ஒரு சில வாடிக்கையாளர்கள் கடனுக்கான மாதத் தவணைகளை சரிவர செலுத்தாமல் கம்பி நீட்டுகின்றனர். அரசியல் பலம், ஆயுத பலம் கொண்டவர்களிடம் இருந்து காரை மீட்கவும் முடியாமல், கடன் தொகையை திரும்ப வசூலிக்கவும் முடியாமல் வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் நஷ்டத்திற்கு தள்ளப்படுகின்றன.

இந்தநிலையில், , விலை உயர்ந்த கார்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்படுவதுடன், அவற்றில் முறைகேடு இருந்தால் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பும் ஏற்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு, தான் கடன் வழங்கும் அனைத்து கார்களிலும் விசேஷ தொழில்நுட்பம் கொண்ட ஜிபிஎஸ் சாதனத்தை பொருத்துவதற்கு டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கார்களில் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருவதாகவும், அதனை இந்திய சப்ளையர்களிடம் இருந்து மிக சரியான விலையில் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பரிசீலனை செய்து வருவதாகவும் டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சாதனத்தை கார்களில் பொருத்தும்போது வாடிக்கையாளர்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் என இரு தரப்பிற்கும் பயன் கிடைக்கும் என்று டொயோட்டா பைனான்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ராஜா எக்கானமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்திடம் கூறி இருக்கிறார்.

அதாவது, ஜிபிஎஸ் சாதனத்தை பொருத்துவதன் மூலமாக, கார் திருடுபோனால் எளிதாக கண்காணிக்க முடியும். மேலும், திருடு போகும் வாய்ப்பு இருப்பதை வைத்து காப்பீட்டு கட்டணமும் கூடுதலாக நிர்ணயிக்கப்படுகிறது. ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு விற்பனை செய்தால், காப்பீட்டு கட்டணம் குறைக்க வாய்ப்பு ஏற்படும்.

மேலும், காரை கடனில் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை கண்டறிவதற்கும், கார் எங்குள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்வதற்கும் கடன் வழங்கும் எங்களது நிறுவனத்திற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்.

அதாவது, பலர் காரை கடனில் வாங்கி மாதத் தவணைகளை செலுத்தாமல் கம்பி நீட்டுவதுடன் காரை மறைத்து வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் தடுக்கப்படும். சிலர் விற்பனை செய்தாலும், அந்த கார் எங்கு இருக்கிறது என்பதையும் கண்டறிய இந்த சாதனம் உதவும் என்று டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் கருதுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு டொயோட்டா கார்களுக்கு, டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் மூலமாகவே கடன் வசதி செய்து தரப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








