பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த டாடா அல்ட்ராஸை விற்பனையில் முந்திய டொயோட்டா க்ளான்ஸா...!
கடந்த மார்ச் மாத விற்பனையில் டொயோட்டாவின் க்ளான்ஸா ஹேட்ச்பேக் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான அல்ட்ராஸ் மாடலை முந்தி ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம் க்ளான்ஸா மாடலை தனது முதல் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சந்தைக்கு கொண்டு வந்தது. மாருதியின் பலேனோ மாடலின் ரீ பேட்ஜ் வெர்சனாக தயாரிக்கப்பட்ட இந்த ஹேட்ச்பேக் கார் தான் டொயோட்டா-சுசுகி கூட்டணியில் உருவான முதல் காராகும்.

அறிமுகத்திற்கு பிறகு ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுவந்த டொயோட்டா க்ளான்ஸா மாடல் கடந்த 2020 மார்ச் மாதத்தில் 1,533 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த கார் அறிமுகமானதில் இருந்து தற்போதுவரை மொத்தம் 24,000-க்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கைகளை சந்தையில் பெற்றுள்ளது.

க்ளான்ஸா மாடலின் இந்த கடந்த மாத விற்பனை எண்ணிக்கை டாடா நிறுவனத்தில் இருந்து பெரிய எதிர்பார்க்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்ட அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரை விட சற்று அதிகமாகும். இந்த ஆண்டு துவக்கத்தில் டாடா நிறுவனத்தில் இருந்து வெளிவந்த அல்ட்ராஸ் மாடலும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் ரக காராகும்.

புதிய தொழிற்நுட்பங்களையும், டிசைனையும் பெற்றிருந்ததால் அறிமுகத்திற்கு முன்பாகவே வாடிக்கையாளர்கள் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் 1,147 யூனிட்கள் விற்பனையான டாடா அல்ட்ராஸ் மாடல் இந்தியாவில் நான்காவது ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக வெளிவந்தது.

மேலும் மொத்த விற்பனையிலும் மாருதி சுசுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 எலைட் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா மாடல்களுக்கு அடுத்து நான்காவது இடத்தில் தான் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் உள்ளது. கவர்ச்சிகரமான தோற்றத்தை இந்த கார் கொண்டிருந்தாலும், உலக நாடுகள் அனைத்தையும் தற்சமயம் ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த மாத விற்பனையில் பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது.

எண்ட்ரீ-லெவல் மாடலாக க்ளான்ஸா மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்ற டொயோட்டா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்ய இயலாத மாடல்களின் விற்பனையை ஒவ்வொன்றாக நிறுத்தி வருகின்றது. இந்த வகையில் சமீபத்தில் இந்நிறுவனத்தின் எட்டியோஸ் மற்றும் கரோல்லா அல்டிஸ் மாடல்கள் இந்தியாவில் இருந்து விடைபெற்றன. இதுகுறித்த முழுமையான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

டொயோட்டா க்ளான்ஸாவில் இந்நிறுவனத்தின் வழக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.2 லி கே12பி என்ஜின் 83 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கி வருகிறது. மற்றொரு 1.2 லி கே12சி என்ஜின் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தின் உதவியுடன் 90 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த இரு என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக இணைக்கப்படுகிறது. கே12பி பெட்ரோல் என்ஜினுக்கு மட்டும் கூடுதல் தேர்வாக சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் க்ளான்ஸா மாடலின் விற்பனையில் டொயோட்டா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருவது, இந்த காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை மூலம் தெரிய வருகிறது. மேலும் பிரபலமான பலேனோ மாடலின் ரீ-பேட்ஜ் வெர்சனாக வேறு இந்த ஹேட்ச்பேக் கார் விளங்குவதால் இதன் விற்பனையில் பெரிய அளவில் எந்த தடுமாற்றமும் இல்லை. டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








