இந்தியாவுக்காக ஒரு நல்ல முடிவை எடுத்த டொயோட்டா!
இந்தியாவின் நலன் கருதி ஒரு நல்ல முடிவை டொயோட்டா கார் நிறுவனம் எடுத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் மிகப்பெரிய டாப் -3 கார் நிறுவனங்களில் ஒன்றாக ஜப்பானை சேர்ந்த டொயோட்டா விளங்குகிறது. இந்தியாவிலும் மிக முக்கிய போட்டியாளராக விளங்குகிறது. மேலும், மிகவும் நீடித்த உழைப்பை தரக்கூடிய, நம்பகமான தயாரிப்புகளை வழங்கும் கார் பிராண்டாகவும் இந்தியர்கள் மனதில் முத்திரை பதித்துவிட்டது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன் கருதி ஒரு முக்கிய முடிவை டொயோட்டா கார் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவிலேயே ஹைப்ரிட் வகை கார்களை உற்பத்தி செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளதாக என்டிடிவி ஆட்டோ தளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

பெட்ரோல், டீசல் கார்களைவிட ஹைப்ரிட் கார்களின் மூலமாக நச்சுப் புகை வெளியேறும் அளவு குறைவதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வாய்ப்பை வழங்கும். இதனால், வாகனப் புகையால் மூச்சுத் திணறி வரும் இந்திய நகரங்களில் தனது ஹைப்ரிட் கார்கள் மூலமாக புகை குறைவதற்கான தனது பங்களிப்பாக டொயோட்டா வழங்க வாய்ப்புள்ளது.

அடுத்து, தற்போது ஹைப்ரிட் கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யும்போது, அதிக அளவில் இறக்குமதி வரி சேர்க்கப்பட்டு ஹைப்ரிட் கார்களின் விலை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி வருகிறது. ஆனால், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்போது மிகச் சரியான விலையில் ஹைப்ரிட் கார்களை இந்தியர்கள் பெற முடியும்.

மேலும், அதிக அளவிலான வாடிக்கையாளர் வட்டத்தை ஹைப்ரிட் கார்களுக்கு உருவாக்கும் முயற்சியில் டொயோட்டா முக்கிய பங்களிப்பை வழங்கும் வாய்ப்பை பெறும். ஹைப்ரிட் கார்களுக்கான சந்தையையும் வலுப்படுத்தலாம்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான மின்சாரம் 60 முதல் 70 சதவீதம் வரை அனல் மின்சாரம் மூலமாக பெறப்படுவதால், அந்த மின் உற்பத்தி நிலையங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது எலெக்ட்ரிக் கார்கள் மறைமுகமாக சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், எலெக்ட்ரிக் கார்களைவிட ஹைப்ரிட் கார்கள் சுற்றுச்சூழலுக்கு சிறந்த தீர்வாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வரும் 2022ம் ஆண்டு முதல் ஹைப்ரிட் வகை கார்களை உற்பத்தி செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம் பல்வேறு வகை ஹைப்ரிட் மாடல்களை கைவசம் வைத்துள்ளது. இந்த மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. மேலும், சுஸுகி நிறுவனத்துடன் இணைந்து ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டொயோட்டா வெல்ஃபயர் காரில் ஹைப்ரிட் சிஸ்டம்தான் உள்ளது. இந்த மாடலும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்போது விலை குறையும். அதேபோன்று, டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் காரும் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








