தடுப்பு வளையங்களை மீறி பெங்களூர் டொயோட்டா கார் ஆலைக்குள் நைசாக புகுந்தது கொரோனா!
கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வரும் பெங்களூர் டொயோட்டா கார் ஆலைக்குள் கொரோனா வைரஸ் புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் கார் ஆலை செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்புக்காக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கு உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அரசு வழிகாட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் அங்கு கடந்த மாதம் 26ந் தேதி முதல் கார் உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கின.
ஆலைக்கு பணிக்கு வரும் பணியாளர்கள் நுழைவாயிலில் வைத்து கொரோனா கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஆலைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், அங்கு பணியாற்றும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு பணியாளர்களும் கடந்த 7ந் தேதி மற்றும் நேற்றும் ஆலையில் பணி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னர் பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டும், டொயோட்டா ஆலைக்குள் அந்த இரண்டு பணியாளர்களும் கொரோனா தொற்றுடன் பணி செய்துள்ளனர்.

தனது இரண்டு ஆலை பணியாளர்களுக்கு கொரோனா தொற்றிக் கொண்டதையடுத்து, அவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உள்ள பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களது குடும்பத்தினர் மிகவும் கவனமாக நடந்து கொள்வதற்கும், கொரோனா அவர்களிடம் இருந்து மேலும் பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இரண்டு பணியாளர்களுக்கு கொரொனோ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பிடதி ஆலையில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆலை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.

பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், இந்த சூழல்நிலை குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள மாருதி சுஸுகி கார் ஆலை தொழிலாளர்களுக்கும், சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் ஆலை தொழிலாளர்கள் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








