புது டொயோட்டா கார் முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!
புதிய டொயோட்டா காரை முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பிடியில் சிக்கி கார் நிறுவனங்களும், டீலர்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தன. இந்த நிலையில், அக்டோபர்- நவம்பர் மாத பண்டிகை காலத்தின்போது கார் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றது.

இதனால், கார் நிறுவனங்கள் உற்சாகத்துடன் கார் உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில், டொயோட்டா கார் நிறுவனம் தொழிலாளர் பிரச்னையில் சிக்கி உள்ளது.

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா கார் ஆலையில் தொழிலாளர் ஒருவர் ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆலை வளாகத்தில் விதிகளை மீறி நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் டொயோட்டா தெரிவித்தது.

அவருக்கு ஆதரவாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஆலை வளாகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்குள்ள இரண்டு ஆலைகளையும் தற்காலிகமாக மூடுவதாக டொயோட்டா அறிவித்தது.

இதனால், அங்கு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன. வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறி கர்நாடக அரசு தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்தது. இதனையடுத்து, அங்கு மீண்டும் உற்பத்திப் பணிகள் சில நாட்கள் நடந்தது.

இந்த நிலையில், தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய டொயோட்டா காரை புக் செய்து காத்திருப்பவர்களுக்கு குறித்த நேரத்தில் டெலிவிரி கிடைப்பதிலும் சிக்கல் இருந்து வருகிறது.

இந்த சூழலில், டொயோட்டா ஆலையில் கார் உற்பத்திப் பணிகள் நேற்று முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக டொயோட்டா ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

கார் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஒவ்வொரு ஷிஃப்ட்டிலும் குறைந்தது 90 சதவீத தொழிலாளர்கள் வருகை பதிவு இருக்க வேண்டியது அவசியம் என்றும் டொயோட்டா தெரிவித்துள்ளது. தற்போது குறைவான தொழிலாளர்களுடன் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், டெலிவிரிப் பணிகளில் அதிக தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பாக கருதலாம்.


Click it and Unblock the Notifications








