கார்கள் விற்பனையில் ஒரேடியாக உச்சத்தை தொட்ட டொயோட்டா!! சுமார் 52% முன்னேற்றம்
டொயோட்டா இந்தியா நிறுவனம் அதன் 2020 அக்டோபர் மாத கார் விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த அறிக்கையின்படி பார்த்தோமேயானால், டொயோட்டா கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் 12,272 யூனிட் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2020 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் சுமார் 52 சதவீதம் அதிகமாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் இந்நிறுவனம் 8116 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இவ்வாறு முந்தைய மாதத்துடனான ஒப்பீடுகையில் மட்டுமில்லாமல் 2019 அக்டோபர் மாதத்துடன் ஒப்பீடும்போதும் விற்பனையில் சிறிய வளர்ச்சியை இந்நிறுவனம் கண்டுள்ளது.

அதாவது 2019 அக்டோபரில் சற்று குறைவாக 11,866 யூனிட் டொயோட்டா கார்களே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் 2019 அக்டோபரில் 744 கார்களை இந்தியாவில் தயாரித்து மற்ற நாட்டு சந்தைகளுக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

விற்பனையில் இந்த முன்னேற்றம் குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை & சேவை பிரிவின் துணை இயக்குனர் நவீன் சோனி கருத்து தெரிவிக்கையில், "2020 மார்ச் முதல் இதுவரை அக்டோபர் மாதம் எங்களது சிறந்த மாதமாக இருக்கிறது. பண்டிகை காலத்தினால் மாதந்தோறும் தேவை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

ஆர்டர்கள் சீராக தொடர்வதால், எங்கள் சில்லறை விற்பனையும் மேற்கூறிய கூற்றை உண்மையாக்குகிறது. இது ஆரம்பம் தான். எங்கள் மொத்த விற்பனை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50% வளர்ச்சியைப் பதிவுசெய்கிறது என்பது பெரிய வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

இந்த ஆண்டு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகியவை நம்பிக்கைக்குரிய புள்ளிவிவரங்களை பெற்றுள்ளன. க்ளான்ஸாவும் ஆண்டு முழுவதும் விற்பனையில் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என கூறினார்.

விற்பனையில் இத்தகைய வளர்ச்சியை கண்டுவரும் இதேவேளையில் டொயோட்டா நிறுவனம் அதன் சமீபத்திய அறிமுகமான அர்பன் க்ரூஸர் காம்பெக்ட்-எஸ்யூவி காரின் டெலிவிரிகளை ஆரம்பித்துள்ளது. இதுகுறித்தும் சோனி பேசுகையில், "சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அர்பன் க்ரூஸரை நாடு முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொடங்கிய அக்டோபர் மாதம், எங்களுக்கு ஒரு முக்கியமான மாதம் ஆகும்.

அர்பன் க்ரூஸர் மிகவும் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அர்பன் க்ரூஸருடன், அந்த குறிப்பிட்ட பிரிவில் வாடிக்கையாளர்களின் மாறும் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்களால் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

டொயோட்டா கார்களின் விற்பனை ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு வேகமாக எழுச்சி கண்டு வருகிறது. மேலும் இந்த பண்டிகை காலத்துடன் இந்த சூழலை சரியாக தொடரும் விதமாக அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி காரை இந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








