சீனர்களுக்கு அடித்த ஜாக்பாட்... அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார காரை களமிறக்கிய டொயோட்டா!
பிரபல டொயோட்டா நிறுவனம், அதி வேகத்தில் சார்ஜ் ஆகும் மற்றும் அதிக ரேஞ்சை வழங்கும் மின்சார காரை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதிலும் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் புதிய இலக்கை எட்டி வருகின்றது. இதற்கு சமீப காலமாக அறிமுகமாகி வரும் மின் வாகனங்களின் எண்ணிக்கையே சான்றாக இருக்கின்றது. ஆனால், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் புதிய வாகனங்களின் அறிமுகத்திற்கு தற்காலிக தடையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள் வழக்கம்போல் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்தவகையில், உலக ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா, அதன் மின்சார கார் ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த அறிமுகம் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகை கோரப் பிடியால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட நாடான சீனாவில்தான் இந்த அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பல வைரசின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் திணறி வருகின்ற வேலையில், சீனாவில் மட்டும் இயல்பு நிலை திரும்பி வருகின்றது. இதன் வெளிப்பாடாகவே, ஊரடங்கு விலக்கப்பட்டு, தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்தே, டொயோட்டா நிறுவனம் புத்தம் புதிய சி-எச்ஆர் என்ற மின் வாகனத்தை அங்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஆட்டோ எக்ஸ்போவில், இரு பிரிமியம் தரத்திலான மின்சார காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்திருந்தது.

இதனடிப்படையிலேயே சி-எச்ஆர் மின்சார வாகனம் அங்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது. ஐந்து வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மின்சார கார் ஆரம்ப விலையாக ரூ. 24.22 லட்சத்தைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், இதன் உயர்நிலை மாடலுக்கு ரூ. 26.87 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் தரம் கொண்ட மின்சார கார்கள் என்பதனாலயே இத்தகைய விலையை டொயோட்டா அறிவித்துள்ளது.

இந்த அதிக விலைக்கேற்ப காரின் ரேஞ்ச் நம்மை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. அதாவது, டொயோட்டா சி-எச்ஆர் மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை செல்ல முடியுமாம். இந்த அதீத திறனை வழங்கும் வகையிலான 54.3 kWh லித்தியம் அயன் பேட்டரியே காரில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 75 சதவீதம் சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே போதுமானது.

ஆனால், அதி வேக சார்ஜ் செய்யும் திறனுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் முக்கிய தேவையாக இருக்கின்றது. இந்த சார்ஜிங் திறன், விலை மற்றும் ரேஞ்ச் உள்ளிட்டவை டெஸ்லா நிறுவனத்தின் மாடல்3 காருக்கு போட்டியளிக்கும் வகையில் உள்ளது. அதேசமயம், தற்போது சீனாவில் புதிதாக களமிறங்கி இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா மின்சார காருக்கு இது கடுமையான போட்டியை வழங்கும் வகையில் உள்ளது.

டொயோட்டா அறிமுகம் செய்துள்ள இந்த கார் ஓர் க்ராஷோவர் ரகம் ஆகும். இதனால், இக்காரின் வெளித் தோற்றம் மின்சார வாகனம் என்பதைக் காட்டிலும், எரிபொருள் வாகனம் என்ற பிம்பத்தையே வெளிக்காட்டும் வகையில் உள்ளது.
இருப்பினும், இது மின்சார வாகனம் என்பதால் எக்சாஸ்ட் சிஸ்டம் இடம்பெறவில்லை. இதுவே, இரு வாகனங்களுக்கும் இடையே வேறுபட்ட வித்தியாசமாக உள்ளது.

இந்த காரின் ரேஞ்ச் மட்டுமே நம்மை வியக்க வைக்கும் வகையில் இல்லை. அதில், இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்பம் மற்றும்ம பிரிமியம் அம்சங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக, 12.3 இன்சில் கொடுக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஃப்ரீ ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மெட்டாலிக் அக்சண்ட்ஸ் உள்ளிட்டவை அதிக கவரும் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன.

இதேபோன்று, கண்கவரும் வெளி மற்றும் உள் தோற்றம் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் சந்தை மேலோங்கி இருப்பதால், விரைவில் சி-எச்ஆர் மின்சார கார் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








