கார் டெலிவிரி பணி பாதிப்புகளை தவிர்க்க டொயோட்டா எடுத்த சூப்பர் முடிவு!
கார் டெலிவிரி பணிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக புதிய முடிவு ஒன்றை டொயோட்டா எடுத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கொரோனா பிரச்னையை கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் மீண்டும் லாக்டவுன் போடப்பட்டு இருக்கிறது. ஒரு வார காலத்திற்கு போடப்பட்டுள்ள லாக்டவுனால், வர்த்தக ஸ்பானங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்குவதில் சிக்கல் எழுந்தது. மேலும், பெரிய பொருளாதார இழப்பும், தொழிலாளர்களின் வருவாய் இழப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாக்டவுன் அறிவிப்பை தொடர்ந்து பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை மூடி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில், லாக்டவுன் அறிவிப்பை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள தனது கார் தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 14ந் தேதி இரண்டாவது ஷிஃப்ட்டில் இருந்து வரும் 22ந் தேதி முதல் ஷிஃப்ட் வரை உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

ஒரு வார கால லாக் டவுனால் டொயோட்டா நிறுவனத்திற்கும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் அதில் பணிபுரிவோரின் வருவாய் இழப்பை தவிர்க்கும் விதமாக, லாக் டவுனில் சில தளர்வுகளை கொடுத்துள்ளது கர்நாடக அரசு.

இந்த புதிய வழிகாட்டு முறைகள் மூலமாக பெங்களூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து பணிக்கு வந்து செல்வோருக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கர்நாடக அரசு வழங்கி இருக்கும் புதிய வழிகாட்டு முறைகளை மனதில் வைத்து, பிடதி ஆலையில் முன்கூட்டியே கார் உற்பத்தியை துவங்குவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வரும் 20ந் தேதி முதல் பிடதி ஆலையில் கார் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், உரிய வழிகாட்டு முறைகளுடன் ஆலையில் பணியாளர்கள் உற்பத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

இதனால், வருவாய் இழப்பை சில நாட்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்பும், தொழிலாளர்களின் வருவாய் பிரச்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரளவு தவிர்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், டொயோட்டா கார்களை முன்பதிவு செய்து காத்திருப்போருக்கு கூடிய சீக்கிரம் டெலிவிரி கொடுக்கும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








