இனி ஆட்டோவை வாடகைக்கு எடுக்கலாம்... உபேரில் புதிய வசதி அறிமுகம்... வாடகை எவ்வளவு தெரியுமா?
உபேர் கால் டாக்சி நிறுவனம் ஆட்டோவை வாடகைக்கு எடுக்கும் சிறப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

செல்போன் செயலியை மையமாகக் கொண்டு இயங்கும் உபேர் கால் டாக்சி நிறுவனம், அதன் வாடகை வாகன சேவையில் புதிய திட்டத்தை கூடுதலாக இணைத்துள்ளது. அதாவது, ஆட்டோக்களை வாடகைக்கு விடும் திட்டத்தை புதிதாக அது அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வாடகை வாகனத் துறையை மீட்டெடுக்கும் விதமாக புதிய சலுகைகளுடன் இந்த சேவையை உபேர் தொடங்கியிருக்கின்றது. இதில், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இலவச கிலோ மீட்டர்களையும் அது வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய சேவை ஆரம்ப கட்டணமாக ரூ. 149இல் இருந்து கிடைக்க இருக்கின்றது. இது ஒரு மணி நேரத்திற்கான வாடகை கட்டணம் ஆகும். இந்த சேவையை நுகரும் வாடிக்கையார்களுக்கு பத்து கிலோமீட்டர்கள் இலவசமாக சவாரி வழங்கப்பட இருக்கின்றது.

வாடகை வாகன ஆட்டோவை அதிகம் பயன்படுத்தும் ஓர் நபர், தனது வேலைகளை முழுமையாக முடிக்கும் வரை ஆட்டோவை தன்னுடனே வைத்துக் கொள்ளும் விதமாக இந்த சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக கார்களுக்கு மட்டுமே பேக்கேஜ் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு இந்த சேவை தற்போது ஆட்டோக்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஒவ்வொரு பயணத்திற்கும் தனி தனியாக பலமுறை ஆட்டோவை புக் செய்யும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒரே புக்கிங்கில் அனைத்து பணிகளையும் இனி முடிப்பது சுலபமாகியுள்ளது. இத்திட்டத்தினை அதிகபட்சமாக 8 மணி நேர பேக்கேஜ் வரை உபேர் வழங்க இருக்கின்றது.

உபேரின் இந்த சிறப்பு சேவையானது நாட்டின் சில முக்கிய நகரங்களில் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. அதில் சென்னையும் அடங்கும். இத்துடன், தலைநகர் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதரபாத் மற்றும் புனே ஆகிய ஆறு நகரங்களில் இச்சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

விரைவில் நாட்டின் பிற முக்கிய நகரங்களில் இச்சேவையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக உபேர் அறிவித்துள்ளது. மேலும் இச்சேவையை விரும்பினால் உபேரின் புதிய செல்போன் செயலியை தரவிறக்கம் அல்லது அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது. அதில், ஆட்டோவை மணிக் கணக்கில் வாடகைக்கு எடுக்கும் தேர்வு வழங்கப்பட்டுள்ளன.

கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஆகிய ஸ்டோர்களில் உபேர் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன்பின்னரே குறைந்தது 1 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆட்டோவை எடுக்க முடியும். மணிக்கு ரூ. 149 என்ற கட்டணத்தைத் தவிர வேறு எந்த சிறப்பு கட்டணமும் இதற்கு இல்லை.

உபேர் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனது ஆட்டோ டிரைவர்களுக்கு (பார்ட்னர்கள்) சிறப்பு பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கி வருகின்றது. அதாவது ஆட்டோவை தூய்மையாக வைத்திருத்தல், மாஸ்க் அணிந்திருத்தல் மற்றும் சானிட்டைசரைப் பொதுப் பயன்பாட்டிற்காக வைத்திருத்தல் உள்ளிட்ட வழிமுறைகளை அது வழங்கியுள்ளது.

ஆகையால், கொரோனா அச்சம் இன்றி ஆட்டோவை வாடகைக்கு எடுப்பது தற்போது சுலபமாகியுள்ளது. உபேரின் இந்த சேவை திருமண பத்திரிக்கையை சொந்தங்களுக்கு வழங்க செல்லுவோர் மற்றும் ரயில் பெட்டியைப் போல் தொடர் பணிகளை அடுக்கடுக்காக வைத்திருப்போர் மிகுந்த பயனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், கொரோனா வைரசால் நலிவடைந்திருக்கும் வாடகை வாகன சேவை இதனால் எழுந்து நிற்கும் எனவும் நம்பப்படுகின்றது. வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்து வாடகை வாகன உரிமையாளர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் அளப்பற்றவையாக இருக்கின்றது. எனவே, இந்த கஷ்ட காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உபேரின் சேவை கணிசமாக உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








