மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!
கொரோனா பிரச்னையை மனதில் வைத்து, மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான, கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தையடுத்து, அரசு அலுவலங்கள் செயல்பாடுகள் முடங்கின. இந்த சூழலில், கொரோனா பிடியிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், பொது முடக்கத்தில் அவ்வப்போது தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டது மற்றும் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களின் வரவு உள்ளிட்ட காரணங்களை மனதில் வைத்து மோட்டார் வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.

முதலில் ஜூன் 30 வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது. நிலைமை சீரடைவதில் சிக்கல்கள் இருந்ததால், செப்டம்பர் 30 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பபட்டுள்ளது.

இதன்படி, வரும் டிசம்பர் 31ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த பிப்ரவரி 1ந் தேதி முதல் மோட்டார் வாகன ஆவணங்கள் காலாவதியாக இருந்தால், அதனை டிசம்பர் 31ந் தேதி வரை புதுப்பித்துக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. வாகனங்களுக்கான தகுதிச் சான்று (FC), பெர்மிட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள் இந்த சிறப்புச் சலுகை மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

எனவே, பிப்ரவரி 1க்கு பிறகு காலாவதியான ஓட்டுனர் உரிமம் மற்றும் மோட்டார் வாகன ஆவணங்கள் வரும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் இந்த கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

வருவாய் இழப்பு, பொருளாதார சிக்கலில் இருக்கும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று ஆசுவாசதத்தை கொடுக்கும். மேலும், நிலைமை மெல்ல சீரடைவதற்கும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் வழிவகுக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








