ஊரடங்கால் அதளபாதாளத்திற்கு சென்ற ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனை!
கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனை இந்தியாவில் படுமோசமான நிலையை சந்தித்துள்ளது.

கொரோனா பிரச்னை உலக மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. ஏழை, பணக்காரன், மதம், ஜாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரின் வாழ்விலும் பல சோதனைகளை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் சிறிய நிறுவனங்கள் பெரும் நிறுவனங்கள் வரை மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் விற்பனை இந்தியாவில் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

ஆம், கடந்த மாதம் வெறும் 131 கார்களை மட்டுமே இந்தியாவில் மொத்தமாக விற்பனை செய்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த மாத விற்பனை 95 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2,751 கார்களை விற்றிருந்த அந்த நிறுவனம் தற்போது வெறும் 131 கார்கள் விற்பனை என்ற நிலையை சந்தித்து பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. பெரிய அளவிலான முதலீடு, கார்கள் இருப்பு, வர்த்தக செயல்பாடுகளுக்கான செலவீனம் என இரண்டு பக்கமும் இழப்பை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய கார் சந்தையில் 1 சதவீத பங்களிப்பை வைத்திருந்த அந்த நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு வெறும் 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் 105 போலோ கார்களையும், 19 வென்ட்டோ கார்களையும், 4 டிகுவான் கார்களையும், 3 அமியோ கார்களையும் விற்பனை செய்திருக்கிறது.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் டி ராக் ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களும் ஒரு யூனிட் கூட கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்படவில்லை என்ற விபரமும் தெரிய வந்துள்ளது.

அனைத்து கார் நிறுவனங்களுமே பெரிய இழப்பை சந்தித்துள்ளன. ஆனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை இந்தியாவில் மிக மோசமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதனால், அந்நிறுவனம் இதிலிருந்து மீண்டு வருவதற்கு கடும் பிரயேத்னங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








