2021 ஃபோர்ஸ் குர்காவிற்கான ஆக்ஸஸரீகள் வெளியீடு!! அதிகாரப்பூர்வ நிறத்தேர்வுகளும் அறிவிப்பு!
2021 ஃபோர்ஸ் குர்கா வாகனத்திற்கான ஆக்ஸஸரீகள் மற்றும் நிறத்தேர்வுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹாராஷ்டிராவை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கான புதிய தலைமுறை குர்கா வாகனத்தை சமீபத்தில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியீடு செய்தது. வழக்கம்போல் பெட்டக வடிவில், நிமிர்ந்த நிலைப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய குர்கா பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

மஹிந்திரா தார் வாகனத்திற்கு சந்தையில் போட்டியாக உள்ள ஃபோர்ஸ் குர்கா, மெர்சிடிஸின் ஜி-வேகன்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படுவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும் புதிய தலைமுறை குர்காவை பல தனி அடையாளங்களுடன் ஃபோர்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இத்தகைய தோற்றமும் போதாது என்போர்க்காக சில ஆக்ஸஸரீகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் விபத்தில் இருந்து முன்பக்க கண்ணாடியை பாதுகாக்கும் விண்ட்ஸ்க்ரீன் பார் இந்த கூடுதல் ஆக்ஸஸரீகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் பொருட்களை வாகனத்தின் மேற்கூரையிலும் வைப்பதற்கு உதவியாக கேரியரும் இந்த ஆக்ஸஸரீகளில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கூரையில் ஏறி பொருட்களை வைப்பதற்கு உதவியாக, வாகனத்தின் பின்பக்கத்தில் ஏணி ஒன்றையும் இந்த ஆக்ஸஸரிகளில் பெறலாம். அதேநேரம் பின்பக்க டெயில்லைட்களை பாதுகாக்கும் விதத்தில், அவற்றின் மீது பொருத்தப்படும் பாதுகாப்பு க்ரில் ஆக்ஸஸரீயாக இணைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனை மேம்படுத்தும் வகையில் அலாய் சக்கரங்கள் மற்றும் அனைத்து-பாதைக்கான டயர்களையும் கூடுதல் ஆக்ஸஸரீயாக வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதேநேரம், உட்புறத்தில் கூடுதல் பயணிகளை ஏற்றி கொள்ள, கூடுதலாக இரு குழந்தைகளுக்கான இருக்கைகளையும் பெறலாம்.

இவற்றினால் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தின் ஆஃப்-ரோடு திறன் மேம்படும் என்பது மட்டும் உறுதி. ஆக்ஸஸரீகளுடன் 2021 குர்கா வாகனத்திற்கான நிறத்தேர்வுகளையும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதன்படி புதிய குர்காவை சிவப்பு, பச்சை, வெள்ளை, ஆரஞ்ச் அல்லது க்ரே நிறத்தில் பெறலாம்.

எங்களை கேட்டால், ஆரஞ்ச் மற்றும் பச்சை நிறங்கள் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்திற்கு மிகவும் எடுப்பாக இருக்கும். 3-கதவு, 4-இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தலைமுறை எஸ்யூவி வாகனத்தின் உட்புற டேஸ்போர்டில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இதனுடன் சற்று சாய்க்கப்பட்ட டெலெஸ்கோபிக் ஸ்டேரிங் சக்கரம், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 12 வோல்ட் பவர் சாக்கெட் மற்றும் முன் & பின் இருக்கை பயணிகளுக்கு தலா ஒன்று என இரு யுஎஸ்பி சாக்கெட்கள் போன்றவையும் 2021 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி வாகனத்தின் கேபினில் வழங்கப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர், ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள், ஃபாலோ-மீ-ஹோம் விளக்குகள், கார்னரிங் விளக்குகள் மற்றும் டயரின் அழுத்தத்தை அளவிடும் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு அதிகப்பட்சமாக 91 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் 2.6 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-சக்கர ட்ரைவ்ட்ரெயின் இணைக்கப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு வாகனம் என்பதை நியாயப்படுவதற்காக, மேனுவல் (முன் மற்றும் பின் சக்கர) பூட்டு, முன் & பின்பக்க ரோல்-எதிர்ப்பு பார்கள் மற்றும் எதிர்காற்றை ஏற்கும் ஸ்னோர்கிலை புதிய குர்காவில் ஃபோர்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

அதிகப்பட்சமாக 700மிமீ வரையில் ஆழம் கொண்ட நீர் நிலையில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா இந்தியாவில் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளது. டெலிவிரிகள் அடுத்த அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளன. இந்த ஆஃப்-ரோடு வாகனத்தின் ஆரம்ப விலையினை ரூ.13 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

விற்பனையில் ஃபோர்ஸ் குர்காவிற்கு போட்டியாக மஹிந்திரா தார் மட்டுமே தற்சமயம் விற்பனையில் உள்ளது. விரைவில் சுஸுகி நிறுவனம் தனது ஜிம்னி மாடலை இவை இரண்டிற்கும் போட்டியாக இந்திய சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. சுஸுகி ஜிம்னி, ஜப்பான் நாட்டு சந்தையில் விற்பனை ஜொலித்து வருகிறது. இதனால் இது நம் நாட்டில் விற்பனைக்கு வந்தால் ஃபோர்ஸ் குர்காவின் விற்பனை எந்த அளவிற்கு பாதிப்படையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








