5-கதவு மஹிந்திரா தாரின் இந்திய அறிமுகம் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!
5-கதவு மஹிந்திரா தாரின் இந்திய அறிமுகம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்குள் பல புதிய தயாரிப்பு வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவதாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 வரும் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

அதற்கு முன்னதாக உலகளவில் இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய எக்ஸ்யூவி700, தற்போதைய எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறையாகும். இதனை தொடர்ந்து புதிய தலைமுறை ஸ்கார்பியோ அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்.

இவற்றுடன் விற்பனையில் இருக்கும் தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனையும் விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை தாருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், புதிய கட்டமைப்பு மற்றும் 3-கதவு பாடி ஸ்டைலில் உருவாக்கப்பட்ட புதிய தாரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு சில குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு சுமார் 1 வருடம் வரையில் உள்ளது.

ஆஃப்-ரோடு பயணங்களை விரும்புவர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் விளங்குகிறது. ஆனால் இதில் மூன்று கதவுகள் மட்டுமே வழங்கப்படுவதால் தனியாகவோ அல்லது 2,3 நபர்களுடன் இணைந்தோ பயணம் செய்வதற்கு தார் ஏற்றதாக உள்ளது.

ஆனால் குடும்பத்துடன், தேவையான பொருட்களை வைத்து செல்லும் அளவிற்கு இட வசதி 3-கதவு தாரில் இல்லை என்பதே உண்மை. இதனாலேயே கூடுதல் இடவசதியுடன் 5-கதவுகளுடன் தார் வாகனத்தை கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால் குடும்ப வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பது மட்டுமின்றி, வாகனம் வாடிக்கையாளர்களின் செயல்முறைக்கு ஏற்றதாக இருக்கும். 5-கதவு தாரின் இந்திய அறிமுகத்தை 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கிறோம்.

தற்போதைய தாருடன் ஒப்பிடுகையில் 5-கதவு தாரின் விலை கிட்டத்தட்ட ரூ.80,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம். 3-கதவு தார் வாகனத்திற்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி மாடல் எதுவும் தற்போதைக்கு இல்லை.

ஆனால் எதிர்காலத்தில் அறிமுகமாகலாம். ஏனெனில் ஜப்பானில் விற்பனையில் உள்ள 3-கதவு ஜிம்னியை இந்திய சந்தைக்கு கொண்டுவர சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. தோற்றத்தில் 3-கதவு தாரை காட்டிலும் 5-கதவு தார் சற்று நீளமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








