வாங்கினால் டாடா காரைதான் வாங்க வேண்டும்... ஏன் என்பதற்கான 6 முக்கிய காரணங்கள்...
டாடா கார்களை ஏன் நீங்கள் வாங்க வேண்டும்? என்பதற்கான முக்கிய காரணங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

1. பாதுகாப்பு
டாடா கார்கள் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகின்றன. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக தன்வசப்படுத்திய முதல் மேட் இன் இந்தியா கார் டாடா நெக்ஸான்தான். இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

தற்போதைய நிலையில் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 2 கார்களை விற்பனை செய்யும் ஒரே இந்திய நிறுவனம் டாடா மட்டுமே. இதுதவிர டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் கார்கள், 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. டாடா நிறுவனம் ஆரம்பத்தில் இருந்து வலுவான கார்களை தயாரித்து வருகிறது.

டாடா நிறுவன கார்கள் விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை பலமுறை காப்பாற்றியுள்ளன. இது தொடர்பான செய்திகளை நீங்கள் அதிகம் படித்திருக்க கூடும். புதிய கார் வாங்கும்போது பாதுகாப்பு என்ற அம்சத்திற்கு நாம் அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குவதால், சமீப காலமாக இந்தியாவில் டாடா கார்களின் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது.

2. 100 சதவீத இந்திய நிறுவனம்
மாருதி சுஸுகி நிறுவனத்தை போல் அல்லாமல், 100 சதவீத இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. எனவே டாடா கார்களை வாங்கினால், 100 சதவீத இந்திய தயாரிப்பை வாங்கிய திருப்தி உங்களுக்கு கிடைக்கலாம். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இது இருக்கும்.

3. சவாலான விலை
பாதுகாப்பு? ஒகே. மேட் இன் இந்தியா? ஒகே. இதற்கு அடுத்தபடியாக நாம் பார்ப்பது விலைதான். டாடா நிறுவனத்தின் கார்கள் அனைத்திற்கும், போட்டியாளர்களுக்கு எதிராக மிக சவாலான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதுவும் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஒரு டாடா கார் உரிமையாளரிடம் சென்று, அவரது கார் பற்றி கேளுங்கள். நிச்சயமாக இந்த விலைக்கு செயல்திறன், பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் ஓகே என்றுதான் பலரும் கூறுவார்கள். வர்த்தக வாகனங்களை தயாரிப்பதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இருக்கும் நிபுணத்துவம், பயணிகள் வாகனங்களின் தரத்திலும் எதிரொலிக்கிறது.

4. சௌகரியம்
ஒரு புதிய கார் என்றால், வலுவாகவும், பாதுகாப்பாகவும் மட்டும் இருந்தால் போதுமா? என்றால், நிச்சயம் கிடையாது. பயணம் செய்ய சௌகரியமாகவும் இருக்க வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் டாடா பார்த்து பார்த்து செய்கிறது. டாடா கார்கள் அனைத்தும் உங்களுடைய சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆரம்ப காலத்தில் வெளிவந்த கார்கள் வேண்டுமானால், சௌகரியம் என்ற அம்சத்தில் கோட்டை விட்டிருக்கலாம். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை கார்களில் சௌகரியமான பயணம் கிடைக்கும் என்பது உறுதி. இந்த விஷயத்தில் நீங்கள் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.

5. வசதிகள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சவாலான விலையில், பாதுகாப்பான, சௌகரியமான மற்றும் செயல்திறன் மிக்க கார்களை வழங்குகிறது. எனவே விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, வசதிகள் அவ்வளவாக இருக்காது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட உண்மையில்லை.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் அனைத்து கார்களிலும் போதுமான அளவிற்கு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர், புதிய சஃபாரி போன்ற கார்களில் பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

6. எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்திற்கும் தயார்
எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலத்தில் சாலைகளை ஆளப்போகின்றன. இதற்கு அனைத்து கார் நிறுவனங்களும் தற்போது தயாராகி வருகின்றன. இந்தியாவில் இந்த விஷயத்தை பொறுத்தவரை டாடாவின் கை ஒரு படி மேலோங்கியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. மேற்கண்ட விஷயங்கள் மட்டுமல்லாது, கார்களின் டிசைன் அம்சத்திலும் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


Click it and Unblock the Notifications








