தங்க மங்கை அவானி லெகாராவிற்கு தயாராகும் பிரத்யேக கார்! ஸ்பெஷல் வசதிகளுடன் வடிவமைக்க உத்தரவிட்ட ஆனந்த்மஹிந்திரா
2021 பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்த பெண் வீராங்கனை அவானி லெகாரவிற்கு பரிசாக வழங்க ஓர் காரை பிரத்யேகமாக வடிவமைக்க ஆனந்த் மஹிந்திரா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம்.

2021ம் ஆண்டிற்கான பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரமான டோக்யோவில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்க பதக்கத்தை அவானி லெகாரா பெற்றுக் கொடுத்திருக்கின்றார். ஏற்கனவே இந்தியாவிற்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது தங்கமும் பெண் வீராங்கனை அவானியின் வாயிலாக கிடைத்திருக்கின்றது.

இந்தியாவிற்கான முதல் தங்க பதக்கம் இது என்பதால் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கின்றது. 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற்ற அவானி லெகாரா சிறப்பாக செயல்பட்டு இப்பதக்கத்தை நமது நாட்டிற்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனால் வீராங்கனைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இத்துடன், சிலர் பரிசுகளையும் அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான Mahindra (மஹிந்திரா) ஓர் காரை பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாத்தியக் கூறுகளுடன் அக்காரை வடிவமைக்க நிறுவனத்தின் மூத்த கார் வடிவமைப்பாளரான வேலுசாமி இடம் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவிற்கும் இதேபோன்று ஓர் புத்தம் புதிய காரை பரிசாக வழங்க இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது. நிறுவனத்தின் புத்தம் புதிய கார் மாடலான XUV700 (எக்ஸ்யூவி700) காரையே பரிசாக வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருந்தது.

இன்னும் இந்த கார் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அது விற்பனைக்கு வந்த பின்னர் அக்கார் நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக வழங்கப்படும். இக்காரை இதுவரை இல்லாத வகையில் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. அதாவது, விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கு இணையாக எக்ஸ்யூவி700 காரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

ஸ்மார்ட் கைப் பிடி, புதிய சின்னம், ஏர் ப்யூரிஃபையர் என பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் அக்கார் உருவாகி உள்ளது. இந்த கார் ஐந்து இருக்கைகள் மற்றும் ஏழு இருக்கைகள் ஆகிய தேர்விலும் கிடைக்க இருக்கின்றது. இத்தகைய ஓர் சிறப்புமிக்க காரையே 2021 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் தங்க பதக்க தாகத்தை தீர்த்து வைத்த நீரஜ் சோப்ராவிற்கு மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே பாரா ஒலம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்று கொடுத்திருக்கும் அவானி லெகாராவிற்கு ஓர் புத்தம் புதிய காரை பரிசாக வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. பரிசாக வழங்கப்படும் காரை அவர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பிரத்யேகமாக வடிவமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த ஆனந்த் மஹிந்திராவின் டுவிட்டர் பதிவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

2016ம் ஆண்டு ரியோ விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்ற சீனாவின் கியூப்பிங் ஜாங் மற்றும் உலக சாம்பியன் பட்டம் பெற்ற உக்ரைனின் இரினா ஷ்செட்னிக் ஆகியோரின் சாதனைகளை தற்போது அவானி லெகாரா முறியடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற ஓர் விபத்தில் அவானி லெகாராவிற்கு முதுகு தண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் 2017ம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.

மஹிந்திரா நிறுவனம் மட்டுமில்லைங்க இன்னும் சில நிறுவனங்களும் இந்தியாவிற்கு பதக்கம் வாங்கி தந்த வெற்றியாளர்களைக் கவுரவித்து வருகின்றது. அந்தவகையில், டாடா நிறுவனம் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்டவர்களுக்குகூட சிறப்பு பரிசாக காரை வழங்கி கவுரவித்தது. தனது புகழ் பெற்ற கார் மாடலான டாடா அல்ட்ராஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காரை வழங்கி அது கவுரவித்தது. இதேபோல் ரெனால்ட் நிறுவனம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தனது மலிவு விலை கார்களில் ஒன்றான கைகர் காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








