ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் சாதித்தவர்களுக்கு சூப்பர் பரிசு... இந்தியர்களின் மனங்களை கொள்ளை கொண்ட மஹிந்திரா!
ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் சூப்பரான பரிசை வழங்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் இந்தியாவிற்கு மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. ஏனெனில் இந்தியா பல்வேறு தங்கள், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி வருகின்றன. இதில், டாடா மோட்டார்ஸ், ரெனால்ட் மற்றும் எம்ஜி மோட்டார் ஆகியவை குறப்பிடத்தகுந்தவை. இந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனமும் ஒலிம்பிக், பாராலிம்பிக் சாதனையாளர்களுக்கு சிறப்பு பரிசை அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றவர்களுக்கு எக்ஸ்யூவி700 காரின் ஸ்பெஷல் எடிசன் பரிசாக வழங்கப்படும் என மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலானது, ஜாவ்லின் எடிசன் (Javelin Edition) என அழைக்கப்படும்.

டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியர்களுக்கு எக்ஸ்யூவி700 காரின் ஜாவ்லின் ஸ்பெஷல் எடிசன் பரிசாக வழங்கப்படவுள்ளது. முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்ற உடனே ஈட்டி என பொருள்படும் ஜாவ்லின் என்ற வார்த்தையை மஹிந்திரா நிறுவனம் பதிவு செய்து விட்டது.

எனவே ஜாவ்லின் என்ற பெயரில் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரின் ஸ்பெஷல் எடிசனை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப இந்தியாவின் ஒலிம்பிக், பாராலிம்பிக் சாதனையாளர்களுக்கு தற்போது இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக மஹிந்திரா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஜாவ்லின் எடிசன் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. எனினும் நாட்டின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், காரின் வெளிப்புறத்தில் சிறப்பு அம்சங்கள் ஏதேனும் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ஸ்டாண்டர்டு எக்ஸ்யூவி700 காருடன் ஒப்பிடுகையில், ஜாவ்லின் எடிசனின் உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அத்துடன் பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவர்கள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் காரில் மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரை பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான விலைகளும் கூட அறிவிக்கப்பட்டு விட்டன. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது செமிகண்டக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி பாதிக்கப்படுமா? என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு இருந்து வந்தது. அந்த குழப்பத்திற்கு மஹிந்திரா நிறுவனம் பதில் அளித்துள்ளது.

செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக மஹிந்திரா நிறுவனம் வாகன உற்பத்தியை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. எனினும் எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி பாதிக்கப்படாது எனவும் மஹிந்திரா நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்காக காத்திருப்பவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரின் விலையை மிகவும் சவாலாக நிர்ணயம் செய்துள்ளது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இந்திய சந்தையில் தனது போட்டியாளர்களுக்கு கடும் தலைவலியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில், புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகிய கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக மஹிந்திரா அறிமுகம் செய்த புதிய தலைமுறை தார் எஸ்யூவி காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் செமிகண்டக்டர் பற்றாக்குறையால் புதிய தலைமுறை தார் எஸ்யூவி காரின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








