200 எலெக்ட்ரிக், 100 சிஎன்ஜி பஸ்கள் வரப்போகுது... கெத்து காட்டும் அஸ்ஸாம்... ஏக்க பெருமூச்சு விடும் தமிழ்நாடு!
அஸ்ஸாமில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகள் அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணம் என்பதால், அவற்றுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசும், மாநில அரசுகள் தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழும் மானியங்களை வழங்கி வருகின்றன. எலெக்ட்ரிக் இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகன பயன்பாடு மட்டுமின்றி, எலெக்ட்ரிக் பேருந்துகளை அதிகளவில் இயக்குவதற்கான முயற்சிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா என பல்வேறு நகரங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். இதுதவிர சிஎன்ஜி பேருந்துகளை இயக்குவதிலும் ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சமீபத்தில் கூட சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அத்துடன் டீசலில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றுவதற்கும் மேற்கு வங்க மாநில போக்குவரத்து கழகம் முயற்சி செய்து வருகிறது. எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். அத்துடன் டீசல் பேருந்துகளுடன் ஒப்பிடுகையில், அவற்றை இயக்குவதற்கான செலவும் கூட குறைவுதான்.

மேலும் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம். எனவே பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளன. இந்த வரிசையில் அஸ்ஸாம் மாநில அரசு தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதன்படி 200 எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்குவதற்கு அஸ்ஸாம் அரசு தற்போது முடிவு செய்துள்ளது. மேலும் 100 சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகள் கவுஹாத்தி நகரில் சேவையில் ஈடுபடுத்தப்படும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு மாநிலங்களிலும் சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் பேருந்துகள் பெரிய அளவில் இயக்கப்படாமல் இருப்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதல் அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. சோதனை அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுவதாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் அந்த திட்டத்தின் நிலை என்ன ஆனது? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையின் கீழ் செயல்படும் அரசு, எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு பலன் கொடுத்துள்ளது. இதேபோல் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு முயல வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தமிழ்நாடு அரசு இத்தகைய திட்டங்களை முன்னெடுத்தால், அது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் உதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. வரும் காலங்களில் தமிழ்நாட்டிலும், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரிக்கும் என நாம் நம்பலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








