விரைவில் 3 சொகுசு எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் களமிறக்கும் பிஎம்டபிள்யூ... அதிரடி திட்டம்!
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டாக வருவேன் என்பது போல எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குவதில் அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம். ஆம், அடுத்தடுத்து 3 சொகுசு எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் அதிரடி திட்டம் போட்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்கால வர்த்தகத்திற்கு அடித்தளம் போடும் வகையில், பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களை கொண்டு வருவதிலும் தீவிரம் காட்டத் துவங்கி இருக்கின்றன.

மேலும், இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டிலும் கடந்த ஆண்டு முதல் எலெக்ட்ரிக் கார்கள் வரிசை கட்டி வருகின்றன. இந்தியாவில் சொகுசு காகர் மார்க்கெட்டில் முதலாவதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இக்யூசி எலெக்ட்ரிக் கார் மாடலை களமிறக்கியது. எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை வைத்து ஆடி, ஜாகுவார் உள்ளிட்ட நிறுவனங்களும் சொகுசு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கின. இந்த நிலையில், இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக உள்ள பிஎம்டபிள்யூ தற்போது எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருப்பதாவது,"நாங்கள் அறிமுகம் செய்த புதிய கார் மாடல்கள் மூலமாக மிக வலுவான வர்த்தகத்தையும், பலன்களையும் பெற்று வருகிறோம். எங்களது புதிய கார் மாடல்கள் அறிமுகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.

அதுவும் முதல்கட்டமாக அடுத்த 6 மாதங்களுக்குள் 3 புதிய சொகுசு எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வர இருக்கிறோம். அடுத்த 30 நாட்களுக்குள் முதலாவதாக ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியையும், அடுத்த 90 நாட்களில் மினி எலெக்ட்ரிக் காரையும், 180 நாட்களில் மூன்றாவதாக ஐ4 எலெக்ட்ரிக் செடான் காரையும் களமிறக்க திட்டமிட்டுள்ளோம்.

உலக அளவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல்களையும் இந்தியாவில் களமிறக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறோம். குறிப்பாக, எங்களது அனைத்து வகை எலெக்ட்ரிக் கார்களும் இந்தியா கொண்டு வருவதற்கு உறுதி பூண்டுள்ளோம்.

ஐரோப்பிய, அமெரிக்க சந்தையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கு அங்குள்ள வாடிக்கையாளர்களிடத்தில் இருந்து சிறந்த பின்னூட்டங்கள் கிடைத்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் சவுகரியத்தை மனதில் வைத்து அனைத்து எலெக்ட்ரிக் கார்களுக்கும் வீட்டு சார்ஜர் கிட் வழங்கப்படும். இந்த 11kW ஏசி சார்ஜர் மூலமாக 7 மணிநேரத்தில் 100 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்," என்று கூறி இருக்கிறார்.

மேலும், நாடு முழுவதும் 35 நகரங்களில் அதிவிரைவு பேட்டரி சார்ஜர் நிலையங்களை அமைக்கவும் பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது. டீலர்களில் 50 kW திறன் வாய்ந்த டிசி ஃபாஸ்ட் சார்ஜர்கள் நிறுவப்பட உள்ளது. மேலும், சார்ஜர் நிலையங்களை வைத்திருக்கும் நிலையங்களுடன் கூட்டணி அமைக்கவும் பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலால் பிஎம்டபிள்யூ கார் பிரியர்களும், சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடலை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர் மத்தியிலும் அதிக ஆவலும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முதல் மாடலாக வர இருக்கும் ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி 100 சதவீத பசுமை பாகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. புவிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உலோக பாகங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது.


Click it and Unblock the Notifications








