எந்த நிறுவனத்தின் காராக இருந்தாலும் சர்வீஸ் செஞ்சிக்கலாம்.. நாட்டிலேயே மிக பெரிய சர்வீஸ் மையம் திறப்பு!!
அனைத்து நிறுவனங்களின் கார்களையும் சர்வீஸ் செய்யக்கூடிய மிகப்பெரிய மையத்தை பிரபல பாஷ் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் தனது சேவையை விரிவாக்கம் செய்யும் விதமாக பிரபல பாஷ் (Bosch) நிறுவனம் வாகன சர்வீஸ் சேவையிலும் ஈடுபட்டு வருகின்றது. இதன் மூலம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து விதமான நான்கு சக்கர வாகனங்களுக்கும் சர்வீஸ் சேவையை வழங்க அது வழங்கி வருகின்றது.

இந்த நிலையிலேயே நாட்டின் மிகப்பெரிய அனைத்து நிறுவனத்தின் கார்களுக்குமான சர்வீஸ் மையத்தினை பாஷ் தொடங்கியிருக்கின்றது. ஹர்யானாவின் பஞ்ச்குலா பகுதியிலேயே இந்த சர்வீஸ் மையம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்நிறுவனம் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட வாகன சர்வீஸ் மையங்களை இயக்கி வருகின்றது.

அவையனைத்தைக் காட்டிலும் மிகப்பெரிய சர்வீஸ் மையமாக தற்போது ஹரியானாவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் சர்வீஸ் மையம் அமைந்துள்ளது. இதுபோன்று எந்தவொரு நிறுவனமும் அனைத்து பிராண்ட் கார்களையும் சர்வீஸ் செய்யும் விதமாக இவ்வளவு பெரிய சர்வீஸ் மையத்தை இதுவரை பயன்பாட்டிற்குக் கொண்டுவரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால்தான் பாஷ் நிறுவனத்தின் இந்த சர்வீஸ் மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. சண்டிகர் மற்றும் மொஹலி பகுதி வாழ் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கின்ற வகையில் இந்த சர்வீஸ் மையத்தை பஞ்ச்குலா பகுதியில் அமைத்திருப்பதாக பாஷ் தெரிவித்திருக்கின்றது.

மேலும், அப்பகுதியில் தங்களின் வாகன சர்வீஸ் மையம் மட்டுமின்றி பிற நிறுவனங்களின் சர்வீஸ் மையங்களும் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. இவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே பாஷ் அனைத்து நிறுவன கார்களையும் சர்வீஸ் செய்வதற்கான மையத்தைத் தொடங்கியிருக்கின்றது.

சுமார் 36 ஆயிரம் சதுர அடியில் இந்த சர்வீஸ் மையம் தொடங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒரே சமயத்தில் 40க்கும் அதிகமான வாகனங்களை சர்வீஸ் செய்ய முடியுமாம். இதற்கான அனைத்து வசதிகளையும் இந்த அமையத்தில் பாஷ் உருவாக்கியிருக்கின்றது. இங்கு சர்வீஸ் மட்டுமின்றி சில தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்வதற்கான வசதியையும் பாஷ் ஏற்படுத்தப்படுத்தியிருக்கின்றது.

தற்போது 28 பணியாட்கள் மட்டுமே இந்த மையத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு 45 கார்கள் என்ற வீதத்தில் பணிகள் நடைபெற இருக்கின்றன. பணியாளர்கள் அனைவரும் நல்ல கை தேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சில ஆய்வுகளிலேயே வாகனங்களில் இருக்கும் கோளாறுகளைக் கண்டறிந்து சரி செய்யுமளவிற்கு அவர்கள் கை தேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

வாகன சர்வீஸ் மட்டுமின்றி கூடுதல் சிறப்பு சேவைகளாக ரோட் சைட் அசிஸ்டன்ஸ், பிக் அப் மற்றும் டிராப் ஆகியவற்றையும் பாஷ் வழங்க இருக்கின்றது. தொடர்ந்து, பணமில்லாமல் இன்சூரன்ஸ் மூலம் ரிப்பேர்களை சரி செய்வது மற்றும் இன்சூரன்ஸைப் புதுப்பித்து தருவது ஆகிய சேவையிலும் பாஷ் ஈடுபட இருக்கின்றது. ஆகையால், ஒரே இடத்தில் அனைத்து வசதிகளையும் பெற முடியும் என்பது தெளிவாக தெரிய வருகின்றது.


Click it and Unblock the Notifications








