மோடி அரசின் கெடுபிடி... இந்திய வருகை திட்டத்திற்கு முற்று புள்ளி வைக்கும் பிரபல கார் நிறுவனம்... முழு விபரம்!
அதிக கெடுபிடி காரணங்களால் இந்திய வருகைக்கு பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் முற்று புள்ளி வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவிற்கு அண்டை நாடுகளால் புதிய புதிய பிரச்னைகள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளினால் ஏற்படும் பிரச்னைகளே மிக அதிகம். சமீபத்தில்கூட இந்தியா-சீனா இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

சீன வீரர்கள் எல்லை மீறி வந்து அத்துமீறலில் ஈடுபடுவதன் காரணத்தினால் அவ்வப்போது எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் நம் நாட்டு வீரர்கள் சிலர் வீர மரணமடைந்தனர்.

சீனாவின் இந்த அத்துமீறலைத் தொடர்ந்து அந்நாட்டைச் சார்ந்த செல்போன் செயலிகளுக்கு இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடி தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, சில மாநில அரசுகளும் தங்களின் பங்காக சீன முதலீட்டிற்கு தடை விதித்தன.

இதையடுத்து சில வாகன உற்பத்தி நிறுவனங்களும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வாகனங்களின் உதிரிபாகங்களின் கொள்முதலை நிறுத்தின. இவ்வாறு அனைத்து தரப்பிலும் சீனாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மக்கள் சார்பிலும் சீன நாட்டு பொருட்களுக்கு எதிரான குரல் வலுக்கத் தொடங்கியது. இவ்வாறு எதிர்ப்பு தீவிரம் அடைந்து வருகின்ற காரணங்களால் சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் சங்கன் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் தனது இந்திய வருகையை ரத்து செய்திருக்கின்றது.

சங்கன் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் 500 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. தமிழ்நாடு, குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய ஏதேனும் ஒரு மாநிலத்தில் தனது உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான ஆய்வில் அது ஈடுபட்டு வந்தது. இந்த நிலையிலேயே கிழக்கு லடாக் பகுதியில் சீன நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

அப்போதிலிருந்தே சீன நாட்டின் மீதான தடை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையே தற்போது சங்கன் வருகைக்கு முற்று புள்ளி வைத்திருக்கின்றது. கடந்த மாதத்தில் இந்தியாவில் செயல்பட்டு வந்த அலுவலகத்தை இழுத்து மூடியது சங்கன். லீஸ் காலம் முடிவடைதற்கு முன்னரே அலுவலக்தை மூடியது. முன்னதாக இந்திய செயல்பாட்டிற்காக நியமிக்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் வெளியேற்றியது.

தொடர்ச்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை வரை இந்திய சந்தையில் நுழைவதற்கான முயற்சியை சங்கன் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், அனைத்துமே தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றது. இந்த நிலையைத் தொடர்ந்தே இந்திய நுழைவு பணியை ஒட்டுமொத்த நிறுத்திக் கொள்ள திட்டமிட்டு, தற்போது அப்பணியிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது.

சங்கன் ஆட்டோமொபைல்ஸ் மட்டுமின்றி மற்றும் சில சீன நிறுவனங்களின் முதலீட்டிற்கும் தடை ஏற்பட்டிருப்பது. கிரேட் வால் மோட்டார்ஸ் மற்றும் செரி ஆட்டோமொபைல் ஆகிய நிறுவனங்களின் இந்திய வருகையும் கேள்விக் குறியாக மாறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








