இது நிஜமா! மீண்டும் விற்பனைக்கு வருகின்றதா ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார்கள்?.. உண்மை நிலவரம் என்ன?
இந்திய அரசியல்வாதிகளின் பிரியமிக்க கார்களில் ஒன்றான அம்பாசிடர் கார்கள் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

இந்திய வாகன சந்தையில் கால் தடம் பதிப்பதற்கான பணியில் சிட்ரோன் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த வருகையை முன்னிட்டு தனது புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ரக காரை இந்தியாவிற்கான முதல் வாகனமாக அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

அறிமுகத்தை முன்னிட்டு இக்காரை அவ்வப்போது இந்திய சாலைகளில் வைத்து தீவிர பலபரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது சிட்ரோன். சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் மட்டுமின்றி மேலும் பல அதன் புகழ்வாய்ந்த கார் மாடல்களை நாட்டில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

அதாவது, சி5 ஏர்க்ராஸ் கார் மட்டுமல்லாமல் மேலும் நான்கு புதிய கார் மாடல்களையும் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதில், சி5 ஏர்க்ராஸ் கார் மட்டும் இந்த மாதமே விற்பனைக்கு வர இருக்கின்றது. பிற மாடல்கள் அடுத்தடுத்த ஆண்டுகள் என மூன்று ஆண்டுகளுக்குள் அவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இதில், சிசி26 எனும் குறிப்பெயர் கொண்ட காரையும் சிட்ரோன் இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கின்றது. இது ஓர் மிட்-சைஸ் செடான் ரக காராகும். ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் டொயோட்டா யாரிஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக சிசி26 மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது சிட்ரோன்.

இந்த காரை 2023 ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. சிட்ரோன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிஎஸ்ஏ சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை கைப்பற்றியது. அதில், அம்பாசிடர் பிராண்டும் சேரும்.

இந்த பிராண்ட பெயரையே சிட்ரோன் நிறுவனம் தனது சிசி26 எனும் குறிப்பெயரில் காட்சியளித்து வரும் மாடலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், விரைவில் இந்திய சாலைகளை அம்பாசிடர் கார் மீண்டும் பதம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாசிடர், இந்திய அரசியல்வாதிகளின் மிகவும் விருப்பமான கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. காமராஜர் முதல் எம்ஜிஆர் வரை தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் இக்காரையே கடந்த காலங்களில் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், தற்போது வெளியாகியிருக்கும் அம்பாசிடர் கார் பற்றிய தகவல் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கின்றது. குறிப்பாக, இந்திய அரசியல்வாதிகளின் ஆவலையும் தூண்டியிருக்கின்றது. ஆகையால், இந்த காரின் வருகை நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








