"பெட்ரோல், டீசல் வாகனங்களை தூக்கிபோடுங்க"... எரிபொருள் விலையுர்வுக்கு அதிரடி கருத்து தெரிவித்த பிஹார் சிஎம்!!
பெட்ரோல், டீசல் விலையுயர்வு மிக கடுமையாக உயர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டி எரிபொருள் வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து தூக்கிப்போடுங்க என பிஹார் மாநில முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100 என்ற சென்சுரியைத் தொட்டிருக்கின்றன. இந்த இமாலய விலையுயர்வைக் கண்டித்து மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, தங்களின் பங்காக நெட்டிசன்கள் சிலரும் மீம்ஸ் மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது விலையுயர்வைக் காரணம் காட்டி பாஜக முன் வைத்த போராட்டங்கள்குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பிஹார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார், "பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வில் இருந்து தப்பிக்க எரிபொருளால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கைவிடுமாறு" கூறியிருக்கின்றார். மேலும், "இந்த வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறும்" அவர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து வருவதை ஒப்புக் கொண்ட அவர், இதில் இருந்த தப்பிக்க "மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதே சிறந்தது" என தெரிவித்தார். தொடர்ந்து, மின் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தது என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.

மக்களுக்கு கருத்து தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம், கடந்த காலங்களில் மின் வாகனத்தைப் பயன்படுத்தி ஓர் முன்னுதாரணமாகவும் அவர் இருந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போது அவர் டாடா நிறுவனத்தின் டிகோர் இவி எனும் மின்சார காரை பயன்படுத்தினார்.

டாடா மோட்டார்ஸ் இந்த மின்சார காரை பிரத்யேகமாக வர்த்தக வாகன துறைக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அதேசமயம், தனி நபர் பயன்பாட்டிற்கான மின் வாகனமாக டாடா நெக்ஸான் ரகத்திலான மின்சார காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இதுவே நாட்டின் மலிவு விலை மின்சார காராகும். இதனை எக்ஸ்எம், எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்+ லக்ஸ் ஆகிய தேர்வுகளில் நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ.16.25 லட்சம் ஆகும்.

மேற்கூறிய அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த விலையிலேயே இந்தியாவில் டாடா நெக்ஸான் மின்சார கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








