எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது இன்னும் ஈஸி ஆகப்போகுது... சூப்பரான திட்டம் வெகு விரைவில் அறிமுகம்...
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை எளிமையாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று வெகு விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்குவதற்கு டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என டெல்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநில அரசு தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து வட்டி மானியம் வழங்கவும் தற்போது திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதால் ஏற்படும் கடனுக்கான வட்டிக்கு 5 சதவீதம் வரை மானியமாக கிடைக்கும்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக டெல்லி அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது நம் அனைவருக்கும் தெரியும். இந்த வரிசையில் வட்டி மானியம் வழங்கும் புதிய திட்டம்தையும் டெல்லி அரசு வெகு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது எளிமையாக இருக்கும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை உயர்ந்தவை என்பதுதான், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் ஒருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனால் மானியங்கள் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை எளிமையாக்குவதற்கு டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் ஒருவருக்கும் இருக்கும் அடுத்த பிரச்னை சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறைதான். ரேஞ்ச் பற்றிய பயம் காரணமாக பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற அதிக தயக்கம் காட்டுகின்றனர். எனவே இந்த பிரச்னையையும் களையும் வகையில், சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டெல்லி அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

இதற்கிடையே டெல்லியில் வர்த்தக வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். இதன்படி வர்த்தக வாகன உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள வாகனங்களில் பாதியை வரும் 2023ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், ''டெல்லி சாலைகளில் வர்த்தக வாகனங்கள் மிக நீண்ட நேரம் இயங்குகின்றன. அவை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறினால், டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை குறிப்பிடத்தக்க அளவில் குறையும்'' என்றார். டெல்லி சாலைகளில் தற்போதைய நிலையில் பீக் ஹவர்களின்போது சரக்கு வாகனங்களை இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனங்களை தடை செய்யப்பட்ட சாலைகளிலும், நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்திற்கு அப்பாலும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் தற்போது ஆலோசனை அளவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








