வேற லெவல்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் ஆசையை தூண்டும் சூப்பரான திட்டம்... என்னனு தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்களை ஊக்குவிப்பதற்காக, அதிரடி திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்வதற்கு டெல்லி அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை டெல்லி அரசு கைவசம் வைத்துள்ளது. இதில், சில திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. இதுதவிர இன்னும் பல்வேறு திட்டங்களை டெல்லி அரசு செயல்படுத்தவுள்ளது.

இதன்படி டெல்லியில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் திட்டம் தொடர்பாக, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் பேசியுள்ளார். உலக வங்கி மற்றும் டபிள்யூஆர்ஐ ரோஸ் சென்டர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், கைலாஷ் கெலாட் இந்த தகவலை தெரிவித்தார்.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தங்களது அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர்களுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

எனவே தனியார் சார்ஜிங் நிலையங்களை அமைக்க விரும்பும் நபர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறோம்'' என்றார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் மானியமும், சலுகைகளையும் வழங்கி வருகிறோம். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள்'' என்றார்.

போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியபடி, டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியமும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. பலரது பாராட்டுக்களையும் பெற்ற இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கையை, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகம் செய்தார்.

இந்த வரிசையில் வெகு சமீபத்தில், 'ஸ்விட்ச் டெல்லி' என்ற திட்டத்தையும் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு அறிமுகம் செய்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை இன்னும் பிரபலமாக்குவதற்காக இந்த திட்டத்தை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை அறிமுகம் செய்தபோது, எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதிகப்படியான விலை என்பதை தவிர, சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறையும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முடிவை எடுப்பதில் இருந்து மக்களை தடுக்கின்றன. ஒருவர் எலெக்ட்ரிக் வாகனம் வாங்குவதை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இவை இரண்டும் உள்ளன. எனவே இந்த 2 பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு டெல்லி அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாகதான் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதே சமயம் ரேஞ்ச் பற்றி மக்களுக்கு இருக்கும் தயக்கத்தை போக்குவதற்காக சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதில், மற்ற மாநிலங்களுக்கு டெல்லி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்றால் மிகையல்ல.


Click it and Unblock the Notifications








